சென்னையில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அதனை பாதியிலேயே ரத்து செய்து விட்டு வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

சென்னையில் விஜய் பரப்புரை

சென்னையில் பரப்புரை மேற்கொள்வதற்காக கோட்டூர்புரம் வழியாக சிஐடி நகர் வந்த விஜய் தனது ரோடு ஷோவை தொடங்கினார். அங்கு தி.நகர் தொகுதி வேட்பாளரான தவெக பொதுச்செயலாளர் ஆனந்துக்கு ஆதரவாக விசில் சின்னத்துக்கு வாக்களித்தார். சென்னையின் பெரும்பாலான பகுதிகள் குறுகிய இடம் என்பதால் விஜய் எங்கும் பேசவில்லை. சிஐடி நகர் வழியாக கண்ணம்மா பேட்டை வழியாக சென்ற விஜய் மீண்டும் அதே பாதையில் திரும்பி வந்து மேம்பாலம் ஏறி நேராக பசுல்லா ரோடு வழியாக வள்ளுவர் கோட்டம் வந்தடைந்தார். 

Continues below advertisement

அவருக்கு வழியெங்கும் தவெக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் ஜேசிடி பிரபாகருக்கு ஆதரவாக வாக்கு கேட்டார்.  வள்ளுவர் கோட்டம் வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலையை வந்தடைந்த விஜய் பின்னர் எழும்பூர் தொகுதி வேட்பாளர் ராஜ்மோகனுக்கு ஆதரவாக விசில் சின்னத்திற்கு ஓட்டுப் போடுமாறு கேட்டுக் கொண்டார். 

அதே வழியில் நேராக சென்னை சென்ட்ரல் வந்தடைந்த அவர் மாலை 6 மணிக்கு தனது ரோடு ஷோ பரப்புரையை முடித்துக் கொண்டு காமராஜர் சாலை வழியாக தனது இல்லம் திரும்பினார். ஆனால் விஜய் இன்று இரவு 8 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி பெற்றிருந்தார். பாதியிலேயே அவர் வீடு திரும்பியதால் அவரைக் காண எழும்பூர் தொகுதியில் காத்திருந்த பலரும் ஏமாற்றமடைந்தனர். 

என்ன காரணம்

இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் விஜய் இதுவரை மாலை 6 மணிக்கு மேல் பரப்புரை மேற்கொள்ளவில்லை. அவருக்கு 8 மணி வரை அனுமதி இருந்தும் ஏன் பரப்புரையை பாதியில் ரத்து செய்தார் என்ற கேள்வி எழுந்தது. கரூர் சம்பவத்திற்கு பிறகு இரவு நேரங்களில் தனது தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியை நடத்த விஜய் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. 41 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த நிலையில் அந்த நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு மேல் தான் நடந்தது. 

தற்போது தேர்தல் பரப்புரையிலும் விஜயை காண ஏராளமான மக்கள் வருகை தருகிறார்கள் என்பதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதனை மீறியும் அசாம்பாவிதம் நடைபெறுவதால் விஜய் விரைவாக தேர்தல் பரப்புரையை முடிக்கிறார் அல்லது பாதியிலேயே ரத்துச் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்வில் புரசைவாக்கம் பகுதிக்கு வேப்பேரி வழியாக விஜய் செல்ல திட்டமிட்டார். ஆனால் அந்த குறுகலான சாலை முழுக்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் அவர் பயண திட்டத்தை மாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.