தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் மாநிலம் முழுவதும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த அரசியல் போட்டியில் புதிய வரவாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் காரைக்குடி போன்ற முக்கிய நகரங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களிடையே ஆதரவு திரட்டி வருகிறார். அவரது வருகை கட்சியினரிடையேயும் ஆதரவாளர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

இந்த தேர்தல் பயணத்தின் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த 9-ஆம் தேதி அவர் பிரசாரம் செய்வார் என்று முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், அண்டை மாநிலமான புதுச்சேரியில் நடைபெறவிருந்த தேர்தல் பணிகளைக் கருத்தில் கொண்டு, கடலூர் பிரசாரமானது ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில்,  இன்று கடலூரில் நடைபெறவிருந்த பிரசாரப் பயணம் மீண்டும் ஒருமுறை மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. தவிர்க்க முடியாத சில நிர்வாகக் காரணங்கள் மற்றும் முன்னேற்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, கடலூரில் நடைபெறவிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அக்கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே தவெகவின் பிரச்சாரங்களுக்கு சரியாக அனுமதி வழங்கப்படவில்லை என தவெகவினர் குற்றம் சுமத்தும் வேளையில், இப்படி முறையாக அனுமதி வழங்கப்படும் பிரச்சாரங்களை தவெக ரத்து செய்வது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

இதற்கு முன்னர் சென்னையில் வில்லிவாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கி  இருந்தும் தவெக இந்த பிரச்சாரங்களை ரத்து செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த திடீர் அறிவிப்பு கடலூர் மாவட்டத் தொண்டர்கள் மற்றும் விஜய்யின் வருகைக்காகக் காத்திருந்த பொதுமக்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், அடுத்தகட்டப் பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.