திருச்சியில் இன்று திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விதமாக பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். முன்னதாக, வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து, நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, திருச்சியில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதோடு, தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, மீண்டும் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.
திருச்சியில் பிரமாண்ட பொதுக்கூட்டம்
திருச்சி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் விதமாக, திருச்சி உழவர் சந்தையில், பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொதுக்கூட்டத்தில், திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அமைச்சர் கே.என். நேரு வேட்பாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார். காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், மீதமுள்ள 8 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். அதில், அமைச்சர் கே.என். நேருவும் ஒருவர். அவர் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
9 தொகுதிகளிலும் திமுக வெல்லும் - அமைச்சர் கே.என். நேரு
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, கடந்த தேர்தலில் திருச்சியில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக மகத்தான வெற்றி பெற்றது போல் இந்த முறையும் வெல்லும் என்று கூறினார்.
மேலும், மு.க. ஸ்டாலினை 2-வது முறையாக மீண்டும் முதலமைச்சர் ஆக்குவதற்கும், திமுக 7-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க, இந்தியாவே பார்த்து வியக்கம் நலத்திட்டங்கள் தொடர, அயராது பாடுபட்டு, மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெறுவோம் என்று உறுதி அளிப்பதாக கூறினார். அதோடு, “தலைவரே நீங்க எங்களுக்கு ஆணையிடுங்க, நாங்கள் செயல்படுவோம்“ என்று தெரிவித்தார்.
வாக்கிங் சென்று வாக்கு சேகரிப்பு
முன்னதாக, இன்று அதிகாலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் மற்றும் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் ஆகியோருடன் வாக்கிங் சென்றவாரே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாகமாக கைகொடுத்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
