தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 490 பேரூராட்சி என அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என நேற்று மாநில தேர்தல் ஆணையாளர் பழனி குமார் அறிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை துவங்குகிறது. இதையொட்டி சேலத்தில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் பிரித்து அனுப்பும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வேட்புமனுத் தாக்கலுக்கு தேவையான விண்ணப்ப படிவங்கள் மற்றும் உபகரணங்கள் அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு அதிகாரிகள் பிரித்து அனுப்பினர். 



இதனிடையே நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள அரசியல் தலைவர்களின் உருவச் சிலைகள் மூடப்பட்டு வருவதோடு, சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி மற்றும் 31 பேரூராட்சிகளைக் கொண்டது. இவற்றில் சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளும் உள்ளன.  


நகராட்சிகளும் அதில் உள்ள வார்டுகளும்


1. ஆத்தூர் - 33 வார்டுகள்


2. மேட்டூர் - 30 வார்டுகள்


3. எடப்பாடி - 30 வார்டுகள்


4. நரசிங்கபுரம் - 18 வார்டுகள்


5. தாரமங்கலம் - 27 வார்டுகள்


6. இடங்கணசாலை - 27 வார்டுகள்



மாவட்டத்தில் உள்ள சங்ககிரி, தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம், பி.என்.பட்டி மற்றும் மேச்சேரி பேரூராட்சிகளில் 18 வார்டுகளும், வீரக்கல் புதூர், கொளத்தூர், நங்கவள்ளி, வீரகனூர், கெங்கவல்லி, தெடாவூர், செந்தாரப்பட்டி, கீரிப்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன் பாளையம், பேளூர், வாழப்பாடி, ஓமலூர், காடையாம்பட்டி, கருப்பூர், ஆட்டையாம்பட்டி, அயோத்தியாபட்டணம், கன்னங்குறிச்சி, இளம்பிள்ளை, மல்லூர், பனமரத்துப்பட்டி, தேவூர், அரசிராமணி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம் பேரூராட்சிகளில் தல 15 வார்டுகளும்  வனவாசி பேரூராட்சியில் 12 வார்டுகளும் உள்ளன.


கடந்த நகராட்சி தேர்தலில் 4 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சி கொண்டிருந்த நிலையில் தற்போது தாரமங்கலம் பேரூராட்சி மற்றும் இடங்கணசாலை பேரூராட்சி நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டதால், சேலம் மாவட்டத்தில் தற்போது நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகள் இடம்பெற்றுள்ளது. சேலம் நகராட்சியாக இருந்து 1994 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதுவரை நான்கு முறை மேயர் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், மூன்று முறை மக்களால் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருமுறை மட்டும் வார்டு கவுன்சிலர்களுக்கு மறைமுக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.