தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், கட்ந்த 50 ஆண்டு காலமாக ஆட்சிக் கட்டிலில் இருந்த இரண்டு பிரதான திராவிட கட்சிகளை மண்ணை கவ்வ வைத்து, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இமாலய வெற்றியை பதிவு செய்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெற்றிக்கு காரணம் என்ன.? அதற்கு இரண்டு முக்கிய காரணிகள்தான் காரணம் என கூறப்படுகிறது. அதை பற்றி இப்போது பார்க்கலாம்.

Continues below advertisement

இமாலய வெற்றியை பதிவு செய்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி, 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நேற்று, அதாவது மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போதே, எப்போது இல்லாத அளவிற்கு தவெக கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது.

வழக்கமாக தபால் வாக்குகள் என்றாலே, அது பெரும்பாலும் திமுகவிற்குத் தான் செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால், அதை உடைத்தெறிந்து, முதல் முறையாக தேர்தல் களம் கண்ட தவெகவிற்கு கணிசமான வாக்குகள் பதிவாகி ஆச்சர்யத்தை அளித்தது.

Continues below advertisement

பின்னர், 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் 3-ம் இடத்தில் இருந்த தவெக, ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே முதல் இடத்திற்கு முன்னேறி, தொடர்ந்து 100 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை வகித்து வந்தது. இறுதியில், 108 இடங்களை கைப்பற்றி,  தமிழ்நாட்டின் இரண்டு பிரதான திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு அதிர்ச்சியை கொடுத்தது.

விஜய்யின் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்த முதல் காரணி

தவெக தலைவர் விஜய்யை பொறுத்தவரை, பெரிய அளவில் பிரசாரம் மேற்கொண்டாரா என்றால், இல்லை என்பது தான் உண்மை. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கட்டுக்கடங்காத கூட்டம் கூடிய நிலையில், அதுவே பிரசாரத்திற்கு பெரும் தடையாக அமைந்தது.

அதை நிரூபிக்கும் விதமாக 41 பேர் உயிரிழந்த கரூர் சம்பவம், அதைத் தொடர்ந்து மற்றொரு கூட்டத்திலும் ஒருவர் உயிரிழந்தது என, அவரது தொண்டர்களின் அட்ராசிட்டியாலேயே அவரது பிரசாரத்திற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, மொத்தத்தில் 10 மாவட்டங்களுக்கும் குறைவாகவே விஜய்யின் பிரசாரம் இருந்தது. 

ஆனால், இப்படி இருந்தும் கூட, விஜய் என்ற ஒற்றை முகத்தின் மேல் இருந்த ஈர்ப்பும், அவர்களுக்கு கிடைத்த சின்னமாக விசிலும், மக்களின் மனதில் ஆழமாக பதிந்ததே, இந்த வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. தவெகவினர் சமூக வலைதளங்களை சரியாக பயன்படுத்தி, தங்களது சின்னத்தை ஒரே இரவில் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தனர். அது பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

இரண்டாவது காரணி என்ன.?

இரண்டாவதாக காரணியாக பார்க்கப்படுவது, மக்களின் மனநிலை தான். 50 ஆண்டு காலமாக இரண்டு திராவிட கட்சிகளும், அதாவது திமுக மற்றும் அதிமுக ஆண்டுவிட்டதால், அவர்களுக்கு மாற்றாக ஒரு கட்சியை இவ்வளவு நாட்களாக மக்கள் தேடி வந்தது தற்போது தான் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே, இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக வர வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 15 வருடங்களாக நாம் தமிழர் கட்சியின் சீமான் போராடி வந்தாலும், அவருடைய சில பேச்சுக்கள், அவர் மீதான நம்பகத் தன்மையை கேள்விக்குரியாக்கியதால், மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. அவரைத் தொடர்ந்து, நடிகரான கமல்ஹாசனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார். ஆனால், ஏனோ அவர் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இதேபோல், சரத்குமார் போன்றோரும் முயற்சிகளை மேற்கொண்டாலும், அவர்கள் மீதெல்லாம் சாதி சாயம் பூசப்பட்டு, அவர்களது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பின்னர் அவர்கள் எல்லாம் அதே திராவிட கட்சிகளுடன் கூட்டணிக்குள் சென்று, இருந்த கொஞ்ச நஞ்ச பெயரையும் கெடுத்துக் கொண்டனர்.

இப்படி ஒரு சூழலில் தான், கடந்த பல வருடங்களாகவே திட்டமிட்டு, இரண்டு வருடங்களுக்கு முன் தனது கட்சியை தொடங்கினார் கோலிவுட்டின் வசூல் மன்னனாகவும், உச்ச நடிகராகவும் இருந்த விஜய். ஏற்கனவே, ஒரு நடிகராக அவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்த நிலையில், அதை அப்படியே அரசியலுக்கு மடைமாற்றினார் விஜய். அரசியல்தனம் இல்லாத அவரது யதார்த்தமான பேச்சுக்களும் மக்களிடையே எடுபட ஆரம்பித்தது. நாம் எதிர்பார்த்த மாற்று இவர்தானோ என எண்ண வைத்தது.

அதற்கு ஏற்றார்போல், அவரை முடக்க திராவிட கட்சிகள் முயன்றதும், அவருக்கு சாதகமானதாகவே மாறியது. அதன் விளைவுதான் இப்போதைய தேர்தல் முடிவு என கூறப்படுகிறது. இந்த வெற்றியை வைத்து, அவர்  தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்தே, அவரது தொடர் வெற்றி அமையும்.