தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ள தவெக இந்த தேர்தல் களத்தில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வி:
இந்த தேர்தலில் யாருமே எதிர்பாராத வகையில் கொளத்தூர் தொகுதி மு.க.ஸ்டாலின் கோட்டை என்று குறிப்பிட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விஎஸ் பாபு-விடம் மு.க.ஸ்டாலின் தோல்வியைத் தழுவினார்.
அவரை வைத்து நான் வென்றேன்:
இந்த வெற்றி குறித்து விஎஸ் பாபு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, திமுக-வின் மாவட்டச் செயலாளராக இருந்தேன். புரசைவாக்கத்தில் 2006 முதல் 2011ம் ஆண்டு வரை திமுக எம்எல்ஏ-வாக இருந்தேன். என்னுடைய எம்எல்ஏ பதவியில்தான் அவர் 2011ம் ஆண்டு வந்து தேர்தலில் நின்றார்.
என்னை வைத்துதான் அவர் அங்கே வெற்றி பெற்றார். அதனால் இப்போது அவரை வைத்து நான் வெற்றி பெற்றேன். அது தளபதிக்கே சேரும். விஜய் மிகப்பெரிய சந்தோஷத்தில் இருக்கிறார். மக்கள் அவரை ஏற்றுக்கொண்டனர். தொண்டர்கள், பெண்கள், வயதானவர்கள் ஏற்றுக்கொண்டனர். நாட்டின் ஒரே தளபதி தவெக தலைவரை ஏற்றுக்கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
திமுக டூ தவெக:
முதலமைச்சராக பொறுப்பு வகித்த மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது திமுக மட்டுமின்றி மற்ற கட்சியினருக்கும் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கொளத்தூர் தொகுதியைப் பூர்வீகமாக கொண்ட விஎஸ் பாபு நேரடியாக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக இந்த தேர்தலில் களமிறங்கினார். அவர் திமுக-வில் இருந்து விலகி, அதிமுக-வில் இணைந்தார். பின்னர், அங்கிருந்து தவெக-விற்கு வந்தார்.
8 ஆயிரம் வாக்குகள்:
தவெக-வில் இணைந்த அவருக்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விஜய் வாய்ப்பு வழங்கினார். மு.க.ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்தில் 74 ஆயிரத்து 202 வாக்குகள் பெற்ற நிலையில், விஎஸ் பாபு அவரைக் காட்டிலும் 8 ஆயிரத்து 795 வாக்குகள் கூடுதலாக பெற்று 82 ஆயிரத்து 997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
DMK: திமுக படுதோல்விக்கு அடித்தளமிட்ட 7 காரணங்கள்! என்னென்ன ஓர் அலசல்
