2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மீண்டும் அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.
திமுக கூட்டணியில் விசிக
2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தொகுதி பங்கீடு முடித்து வேட்பாளர்களை அறிவிக்கும் மும்முரத்தில் உள்ளது. காங்கிரஸ், பாஜக தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். இப்படியான நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இம்முறையும் திமுக கூட்டணியில் தொடர்கிறது.
அந்த கட்சி இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற வேண்டும் என தீவிரம் காட்டியது. ஆனால் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இருப்பதால் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 6 தனித்தொகுதிகளும், 2 பொதுத்தொகுதியும் ஆகும். அதன்படி காட்டுமன்னார்கோயில், செய்யூர், பெரியகுளம், திண்டிவனம், அரக்கோணம், பண்ரூட்டி, கள்ளகுறிச்சி, திருப்போரூர் ஆகிய இடங்களில் விசிக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.
மீண்டும் களமிறங்கும் திருமாவளவன்
இந்த நிலையில் இந்த 8 இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை திருமாவளவன் அறிவித்துள்ளார். அந்த வகையில்,
- காட்டுமன்னார்கோயில் - தொல்காப்பியன் திருமாவளவன்
- செய்யூர்- சிந்தனை செல்வன்
- பெரியகுளம் - ஆற்றலரசு
- திண்டிவனம் - வன்னியரசு
- அரக்கோணம் - எழில் கரோலின்
- திருப்போரூர் - பன்னீர்தாஸ்
- பண்ருட்டி - அப்துல் ரஹ்மான்
- கள்ளகுறிச்சி- முனைவர் வழ .மாலதி
ஆகிய 8 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் திருமாவளவன் மீண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. அவர் தற்போது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.,யாக உள்ளார். 2019,2024 ஆகிய இரு தேர்தல்களிலும் அந்த தொகுதியில் வெற்றி வாகை சூடினார்.
அதேசமயம் அவர் சட்டமன்ற தேர்தலில் கடைசியாக 2016ம் ஆண்டு மக்கள் நல கூட்டணியில் இருந்தபோது அதே காட்டுமன்னார்கோயில் தொகுதியில் களமிறங்கினார். அந்த தேர்தலில் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பறிகொடுத்தார்.
3 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு மறுப்பு
இந்த நிலையில் விசிகவின் முகமாக அறியப்படும் 2021 தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த திருப்போரூர் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜி, நாகை எம்.எல்.ஏ, ஆளூர் ஷாநவாஸ், செய்யாறு தொகுதியில் போட்டியிட்ட பனையூர் பாபுவுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நாகை தொகுதி மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி மீது சமீபகாலமாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.
