தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், நடிகருமான ஸ்ரீநாத், மதுரை விமான நிலையம் வழியாக தூத்துக்குடிக்கு வருகை தந்தார். வழியெங்கும் அவருக்குத் தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்
மண்ணின் மைந்தன் நான்!
தூத்துக்குடி தொகுதியில் தனது வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதாகத் தெரிவித்த ஸ்ரீநாத், தன்னை 'வெளியூர் வேட்பாளர்' என்று விமர்சிப்பவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்தார். "நான் இந்த மண்ணின் மைந்தன். நான் பிறந்த மருத்துவமனைக்குத்தான் இப்போது நேராகச் செல்கிறேன். எனது மனைவியும், மகளும் இதே ஊரைச் சேர்ந்தவர்கள். எனவே, என்னை வெளியூர் காரன் என்று கூறுவதை ஏற்க முடியாது," மேலும் அரசியலுக்காக என்னை வெளியூர் வேட்பாளர் என்று கூறுவார்கள் ஆனால் கனிமொழி எங்கே இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்
தளபதி விஜய் மீது நம்பிக்கை
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தென் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து விரைவில் தூத்துக்குடிக்கு வந்து பிரச்சாரம் செய்வார் என உறுதியளித்த ஸ்ரீநாத், "எங்கள் தலைவர் தளபதி விஜய் மீது எனக்குத் தனிப்பட்ட அன்பும், மரியாதையும் உண்டு. அவர் செய்ய வேண்டிய கடமையைச் செய்வார். இதுவரை இருந்த அரசியல் தலைவர்கள் வாக்குறுதிகளை மட்டுமே அளித்தனர், ஆனால் எங்கள் தளபதி சொன்னதைச் செய்து காட்டுவார்," என்று குறிப்பிட்டார்.
'தீய சக்திகளை விரட்டுவோம்'
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டங்களில், அக்கட்சியின் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் ஊடுருவி சிலர் அராஜகத்தில் ஈடுபடுவதை ஸ்ரீநாத் கடுமையாகக் கண்டித்தார். இது குறித்து அவர் பேசுகையில்:"தவெக ஆதரவாளர்கள் என்ற பெயரில் வந்து அராஜகத்தில் ஈடுபடும் செயல் கண்டிக்கத்தக்கது. இதற்கு காவல்துறை உரிய பதிலடி கொடுக்க வேண்டும். இதிலிருந்தே தெரிகிறது யார் அந்தத் 'தீய சக்தி' என்பது. எங்கள் தலைவர் ஏன் அந்தத் தீய சக்தியை விரட்ட வேண்டும் என்று கூறுகிறார் என்பது இப்போது புரியும். நாம் அனைவரும் 'தூய சக்தி', அந்தத் தீய சக்தியை நிச்சயம் விரட்டுவோம்."
அஜிதா குறித்து சொன்னது என்ன?
அஜிதா ஆக்னல் விவகாரம் குறித்து பேசிய அவர், இது முற்றிலும் தனிப்பட்ட விஷயம், இது குறித்து தங்கையிடம் தான் கேட்க வேண்டும் எனப் பதிலளிக்காமல் தவிர்த்தார். மேலும் தளபதி விஜய் ஏற்கனவே கூறிவிட்டார், இது ஏ டீம் அல்லது பி டீம் கிடையாது, இது மக்களின் டீம் என்று ஸ்ரீநாத் தெளிவுபடுத்தினார்.
"முன்பு அமைச்சர்களாக இருந்தவர்கள் சாதாரண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான், ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்து பாருங்கள், மாற்றம் என்னவென்று காட்டுகிறோம்," என்று சவால் விடுத்தார்.
18 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் தளபதி விஜய்யின் பக்கம் இருப்பதாகவும், அவர் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றும் நம்பிக்கையுடன் கூறினார்
