2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக தொழிலதிபர் ஆர்.எஸ்.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காலையில் கட்சியில் சேர்ந்த அவரின் பெயரின் உடனடியாக டிக் அடிக்கப்பட்டுள்ளதன் பின்னணி பற்றிப் பார்க்கலாம்.
தொழிலதிபர் ஆர்.எஸ்.முருகன்
வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு முதல்முறையாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட்டார். இதில் திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக ஆர்.எஸ். முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த தொகுதியின் வேட்பாளராக நெல்லை ராஜகோபால் அறிவிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஆர்.எஸ். முருகன் டிக் செய்யப்பட்டுள்ளார்.
தொழில்துறையில் ஆர்.எஸ்.எம் குடும்பத்தினரை தெரியாதவர்கள் தென் மாவட்டங்களில் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக திகழ்கிறார் ஆர்.எஸ். முருகன். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை அடுத்திருக்கும் வடக்கு விஜயநாராயணம் தான் இவரின் சொந்த ஊர். நெடுஞ்சாலைத்துறையில் முன்னணி ஒப்பந்ததாரராக வலம் வந்த இவர் கடந்த அதிமுக ஆட்சியின்போது எடப்பாடி பழனிசாமி கவனித்துவந்த பொதுப்பணித்துறையில் மிகப்பெரிய அளவில் வலம் வந்தார். திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் செல்வாக்கு மிக்கவராகவே ஆர்.எஸ்.முருகன் வலம் வந்தார்.
தென்மாவட்டங்களில் யாருக்கு நெடுஞ்சாலை ஒப்பந்தம் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் முக்கிய புள்ளியாக திகழ்ந்தார் எனவும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்
இவருடைய மகன் திருமணம் திருநெல்வேலி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடே திரும்பும் அளவுக்கு அதிரிபுதிரியாக கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்றது. நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தியின் பேத்தியை தான் தன் மகனுக்கு ஆர்.எஸ்.முருகன் திருமணம் செய்து வைத்துள்ளார். சீர்வரிசையாக மட்டும் 5 கிலோ தங்க நகைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராஜா காலத்து திருமணத்தை நினைவுக்கூரத்தக்க வகையில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மாதம்பட்டி ரங்கராஜின் சமையல் தொடங்கி, விருந்தினர்களுக்கு வெள்ளித்தட்டில் உணவு பரிமாறிய சம்பவமும் வைரலானது. மேலும் தாம்பூலத்துடன் 1,500 ரூபாய் ரொக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பிரமாண்ட ஊர்வலம், விஐபிக்களின் வாழ்த்து மழை என அப்படி ஒரு திருமணத்தைக் கண்டு ஊரே வாயை பிளந்தது என சொல்லலாம்.
காலையில் கட்சி உறுப்பினர்.. பின் வேட்பாளர்
இந்த நிலையில் அதிமுக பிரமுகராக வலம் வந்த ஆர்.எஸ்.முருகன் சில மாதங்களுக்கு முன் திமுகவில் ஐக்கியமானார். அவர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த நிலையில் நேர்காணலும் செய்யப்பட்டார். ஆனால் திமுக அவரை வேட்பாளராக தேர்வு செய்யவில்லை. இந்த நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தில் திடீரென நேற்று அதிகாலையில் இணைந்த அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதன்பின்னணியில் தேர்தல் செலவு தொடங்கி அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாக ஆர்.எஸ்.முருகன் உறுதியளித்திருப்பதால் விஜய்யும் இதற்கு ஓ.கே. சொன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.
