தனிப்பட்ட விமர்சனம் செய்தால் தகுந்த பதிலடியை கொடுப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Continues below advertisement

2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அம்மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பரப்புரை மேற்கொண்டார். 

திருச்சி மாவட்டத்தில் வெற்றியைக் கொடுத்து அதிமுகவின் கோட்டையாக மக்களாகிய நீங்கள் மாற்ற வேண்டும். இன்றைக்கு மு.க.ஸ்டாலின் பேசும் அனைத்தும் பொய்யாக உள்ளது. ஒரு எதிர்க்கட்சி தலைவராக அவர்கள் செய்த தவறுகளை விமர்சிக்கிறோம். அதற்கு அரசியல் ரீதியாக விமர்சித்தால் பரவாயில்லை. தனிப்பட்ட முறையில் கூறினால் 10 முறை திருப்பி கொடுக்கப்படும். 

Continues below advertisement

திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, இரட்டை இலக்கில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதாக பொய்களை கூறுகிறார். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டு வந்ததால் தான் பொருளாதாரம் உயர்ந்தது. ஆனால் திமுக ஆட்சி வந்ததும் இப்படி வளர்ச்சி கண்டதாக பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார்கள். 

மக்களை ஏமாற்றி 5 ஆண்டுகாலம் ஓட்டி விட்டார்கள். மக்களுக்கு அந்த பொய் எல்லாம் தெரிவில்லை. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமையாகும். தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்வதாக கூறி அங்கு போய் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். மக்களுடைய வரிப்பணத்தை எல்லாம் வீணடிக்கிறார். நடைபயணம் போறதெல்லாம் படம்பிடிச்சு காட்டுவார். அதற்காகவா நீங்கள் வாக்களித்தீர்கள். அவரை முதலமைச்சராக ஆக்கியதற்கு பளு தூக்கியது, சைக்கிள் ஓட்டியது, நடைபயணம் போனது தான் மிச்சம்.நான் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசியதாக சொல்கிறார். 

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.,  சிவா காமராஜரைப் பற்றி கொச்சைப்படுத்தி பேசினார். அதனை மு.க.ஸ்டாலின் கண்டிக்கவில்லை. ஜெயலலிதா, எம்ஜிஆரை எல்லாம் எவ்வளவு கேலி பேசினார்கள். தனிப்பட்ட விமர்சனம் செய்தால் தகுந்த பதிலடியை நானும், எங்கள் கட்சி நிர்வாகிகளும் கொடுப்பார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். பத்திரிக்கையாளர் சுதந்திரத்தை மு.க.ஸ்டாலின் நெறித்துள்ளார். திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மூலம் அனைவரின் செல்போன் எண்ணையும் பெற்று திமுகவுக்கு வாக்களியுங்கள் என சொல்கிறார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் ஒன்னுமே செய்யல என சொல்லியிருக்கிறார். நாங்கள் ஏராளமான திட்டங்களை செய்திருக்கிறோம். அதிமுக கொண்டு வந்த இரு நீர் திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டார்கள். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஏரி, குளத்தில் தாராளமாக வண்டல் மண்ணை விலையில்லாமல் அள்ளிக்கொள்ளலாம்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.