தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக-வை காரணம் காட்டி திமுக கூட்டணியில் 28 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டையும் கூட்டணியில் வாங்கியுள்ளனர். இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்ததில் முக்கிய பங்காற்றிய கட்சி, தமிழ்நாட்டை ஆட்சி செய்த கட்சி என்று பெருமை கொண்ட காங்கிரஸ் தமிழ்நாட்டில் இன்று பெருமளவு சரிந்த செல்வாக்கையே கொண்டுள்ளது என்பதே கள யதார்த்தம்.

Continues below advertisement

கடுப்பில் காங்கிரஸ் நிர்வாகிகள்:

28 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள காங்கிரஸ் தலைமை மீது கட்சியின் தொண்டர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். தமிழ்நாட்டிலே அதிக உட்கட்சி பூசலைக் கொண்ட கட்சியாக காங்கிரஸ் உள்ளது. தற்போது காங்கிரஸ் அறிவித்துள்ள வேட்பாளர்களில் சிலர் தொகுதிக்கே தொடர்பு இல்லாதவர்களும், மாற்றுக்கட்சியினரும் என்பதால் அந்தந்த தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கொதிப்பிற்கு காரணம் என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டுள்ள ஸ்ரீநிதி கடந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் சார்பில்  உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டவர். வேறு கட்சியில் இருந்து வந்தவருக்கு உடனடியாக போட்டியிட வாய்ப்பு தந்தது அந்த தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளை ஆதங்கப்பட வைத்துள்ளது.

Continues below advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸின் செல்வாக்கு கை ஓங்கியுள்ளது. இங்குள்ள விளவங்கோடு தொகுதியில் டிடி பிரவீன் என்பவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழ்நாட்டில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதா? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 

தொடர்பு இல்லாதவர்களுக்கு சீட்டு?

குளச்சல் தொகுதியில் செல்வாக்கு மிகுந்த பிரின்ஸ்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்னாகரம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக களமிறங்கியிருக்கும் சூழலில், பல வருடமாக காங்கிரசில் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு கட்சியில் சேர்ந்த சில நாட்களில் ஜிகேஎம் தமிழ்க்குமரனுக்கு ( ஜிகே மணியின் மகன்) வாய்ப்பு வழங்கப்பட்டது அந்த தொகுதி காங்கிரசாருக்கு வேதனையை உண்டாக்கியது.

கிருஷ்ணகிரி தொகுதியில் அந்த தொகுதிக்கே தொடர்பு இல்லாத செல்வக்குமாரை காங்கிரஸ் தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வந்த செல்வக்குமாரை அந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரகுவும், ஆதரவாளர்களும் புறக்கணித்துள்ளனர்.

வெற்றி கிட்டுமா?

மேலூர் தொதியை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வசப்படுத்த மாணிக்கம் தாகூரும், சுதர்சன நாச்சியப்பனும் ஆர்வம் காட்டி வந்த நிலையில், காஞ்சிபுரம் நிர்வாகி விஸ்வநாதனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் மதுரை காங்கிரஸ் கடுப்பில் உள்ளது. இதனால், அவருக்கு போட்டியாக காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். 

திமுக ஆதரவு காரணமாகவே காங்கிரஸ் தமிழ்நாட்டில் கோலாேச்சி வருகிறது என்ற விமர்சனம் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தொகுதிக்கே தொடர்பு இல்லாதவர்களையும், தொகுதியில் அதிருப்தி உள்ளவர்களுக்கும் வாய்ப்பு வழங்கியிருப்பதால் அவர்களின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.