தமிழ்நாடு முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நகர்ப்புறங்கள், கிராமப்பகுதிகள் என மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

சாலையே இல்லாத மலைக்கிராமங்கள்:

போக்குவரத்து வசதிகள் கொண்ட பகுதிகள் மட்டுமின்றி போக்குவரத்து வசதிகள் குறைந்த, முற்றிலும் சாலை வசதிகளே இல்லாத பல்வேறு பகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பல மலைக்கிராமங்களிலும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

போடி தொகுதி மலைக்கிராமங்கள்:

ஆனால், அதில் பல மலைக்கிராமங்களுக்கு போதிய சாலை வசதிகள் இல்லை. போடி தொகுதிக்கு உட்பட்ட அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, சுப்பிரமணியபுரம், குரவன் குழி, பேச்சியம்மன் சோலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.

Continues below advertisement

சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும், தங்களுக்கு முறையான சாலை வசதி,  உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை என்பது இப்பகுதி மக்களின் நீண்ட காலப் புகாராக உள்ளது.

சாலை மறியல்:

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் மலைக்கிராமங்களுக்குக் கொண்டு சென்றனர். அப்போது, தங்களது கோரிக்கைகள் பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்படுவதால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்கள், இயந்திரங்களை மேலே கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சாலை மறியலில் ஈடுபட்ட மலைக்கிராம மக்கள், "அடிப்படை வசதிகள் செய்து தராதவரை தேர்தலை அனுமதிக்க மாட்டோம்" என அவர்கள் முழக்கமிட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் நல்லு தலைமையிலான காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். 

"மக்களின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் எடுத்துரைத்து, அவை விரைவில் நிறைவேற்றப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் வாக்குறுதியை ஏற்று சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். மலைப்பாங்கான பாதை என்பதால், அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் குதிரைகளின் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்  வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu Election 2026: தமிழ்நாடு தேர்தல் - 5.73 கோடி வாக்காளர்கள், 4000+ வேட்பாளர்கள், 70000+ வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு