திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் திமுக சார்பில் ஜலால், அதிமுக சார்பில் தமீன், பாமக சார்பில் சுரேஷ், நாகூர் மீரான் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்த நிலையில் அதே வார்டில் திமுக நகர பொறுப்பாளர் ஜலால் என்பவர் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இவர் 9-வது வார்டில் போட்டியிடுவதற்கு பதிலாக 10-வது வார்டில் தற்போது போட்டியிடுகிறார். இந்த நிலையில் 10 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் நாகூர் மீரான் என்பவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால் திமுகவைச் சேர்ந்தவர்கள் வாபஸ் வாங்கச் சொல்லி பலமுறை மிரட்டியதாக மீரான் கூறுகிறார். இருப்பினும் வாபஸ் வாங்காமல் வேட்பாளர் நாகூர்மீரான் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.




இந்த நிலையில் சுயேட்சை வேட்பாளர் நாகூர் மீரான் என்பவருக்கு திமுகவினரால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார். அசாதாரண சூழ்நிலையில் உள்ளதால் எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் இருந்து வருவதால் 10 வது வார்டில் வாக்குப்பதிவு அன்று திமுகவினரை வைத்து மிகப்பெரிய பிரச்சினை செய்ய உள்ளதாகவும், எனவே வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடியில் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுயேச்சை வேட்பாளர் நாகூர் மீரான் வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் உள்ள பொறியாளர் உஷாராணியிடம் மனு அளித்துள்ளார்.



 


சுயேச்சை வேட்பாளர் நாகூர் மீரான் கூறுகையில்; 


கடந்த முறை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நான் இதே 10- வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று மக்கள் பணி சிறப்பாக செய்தேன். மீண்டும் இந்த முறையும் அதே வார்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். ஆனால் நான் வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து திமுக வேட்பாளர் நகர பொறுப்பாளருமான ஜலால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னிடமும் என் மகன் காலேஷா விடமும் நான்தான் சேர்மன் வேட்பாளர் என்றும் கூறி என்னை வாபஸ் பெறும்படி மிரட்டி வருகிறார். மேலும் எனக்கு வெற்றி வாய்ப்பு அதிக அளவில் இருப்பதால் எப்படியாவது போட்டியில் இருந்து என்னை விலகச் செய்ய கட்டாயப்படுத்தி வருகிறார். இதனால் ஓட்டு சேகரிக்க இன்னும் நான் என்னுடைய வார்டுக்கு செல்லவில்லை. மேலும் தேர்தல் முடியும் வரை எனக்கு எனது குடும்பத்தினருக்கும் பெரிய அச்சுறுத்தலும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நம்புகிறேன்.


எனவே எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும். பதற்றமான நிலையில் காணப்படும் 10-வது வார்டு தகுந்த பாதுகாப்பு அளித்து ஓட்டுச்சாவடி வளாகம் முழுவதும் வீடியோ கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் எனவும் கூறினார்.