தமிழ்நாட்டில் முதன்முதலாக 2026-ல் களமிறங்கி 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது தவெக. எனினும் ஆட்சியமைக்கத் தேவைப்படும் 118 தொகுதிகள் இல்லாததால், சிறிய கட்சிகள் ஆதரவுடன் தவெக ஆட்சியமைக்க உள்ளது. தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்துள்ள நிலையில், விசிக நாளை ஆதரவு கொடுக்கும் என்று தெரிகிறது. இதனால் தமிழ்நாட்டில் முதன்முதலாக தொங்கு சட்டசபை உருவாகிறது.

Continues below advertisement

தொங்கு சட்டசபை என்றால் என்ன?

ஒரு மாநிலத்தில் ஒரு கட்சிக்கு ஆட்சியமைக்கத் தேவைப்படும் பெரும்பான்மை (50 சதவீதத்துக்கும் அதிகமான) இடங்கள் கிடைக்காத நிலையில், பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைப் பிடிப்பதே தொங்கு சட்டசபை ஆகும்.

தமிழ்நாடு அரசியலில் இதுநாள் வரை தொங்கு சட்டப்பேரவை உருவானதில்லை. முன்னதாக தமிழ்நாடு மாநிலம் உருவாகும் முன், மெட்ராஸ் மாகாணத்தில் தொங்கு சட்டப்பேரவை என்ற நிலை ஏற்பட்டது. குறிப்பாக 1952-ல் நடந்த தேர்தலில், சட்டப்பேரவைக்கு 375 தொகுதிகள் இருந்தன. அப்போது பெரும்பான்மைக்கு 188 உறுப்பினர்கள் தேவைப்பட்டது. எனினும் காங்கிரஸ் 152 இடங்களில் மட்டுமே வென்றதால், தொங்கு சட்டமன்றம் உருவானது. காமன் வீல் கட்சி, உழைப்பாளர் கட்சி ஆகிய சிறு கட்சிகளின் ஆதரவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

Continues below advertisement

2006-ல் நடந்தது என்ன?

2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தனியாக 96 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. எனினும் திமுக கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக் கட்சிகள் (காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பாமக) வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திமுகவை மைனாரிட்டி அரசு என்று விமர்சித்ததும் திமுகவின் அப்போதைய தலைவர் கருணாநிதி, மைனாரிட்டிகளுக்கான அரசு என்றும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவாவில் தொங்கு சட்டமன்றம்

40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 21 தொகுதிகள் தேவை. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக 13 இடங்களையும் எதிர்க் கட்சியாக இருந்த காங்கிரஸ் 17 இடங்களையும் பெற்றது.

காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக சிறிய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும் பாஜக, தொங்கு சட்டமன்றத்தை உருவாக்கி, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி

2019 சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. அங்கு, 288 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சி அமைக்க 145 தொகுதிகள் தேவை. பாஜக 105 இடங்களைப் பெற நிலையில், சிவசேனா 56 இடங்களைப் பெற்றிருந்தது. பாஜகவை ஆளுநர் முதலில் அழைத்த நிலையில், அவர்களால் பெரும்பான்மையைக் காட்ட முடியவில்லை. தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைத்தன. இது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியாக இருந்தது.

தொங்கு சட்டசபையால் என்ன சாதகம், பாதகம்?

தமிழ்நாட்டில் முதல்முறையாக தொங்கு சட்டமன்றம் உருவாகி உள்ள நிலையில் கீழே உள்ள பிரச்சினைகள் ஏற்படலாம்.

கூட்டணிபேரம்

ஆட்சி அமைப்பதற்காக கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்டணி பேரங்கள் அதிகரிக்கும்.

நிர்வாகத்தில் சிக்கல்

நிலையான ஆட்சி அமையும் வரை, அரசு நிர்வாக ரீதியாக முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படலாம்.

மறு தேர்தல் சூழல்

தொங்கு சட்டமன்றத்துக்கு ஆதரவு அளித்த கட்சிகள், ஒருவேளை தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அல்லது மீண்டும் தேர்தல் நடத்தப்படலாம்.