தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பிற்கிடையே கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் திமுகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளை கொண்டது. 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதேசமயம் 2011  முதல் 2021 வரை ஆட்சியில் இருந்த அதிமுக எதிர்க்கட்சியாக அங்கீகாரம் பெற்றது. இந்த நிலையில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி வெளியானது. 

அதன்படி ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஒன்றரை மாதங்களாக நடந்த தேர்தல் திருவிழா நகரம் தொடங்கி கிராமம் வரை களைகட்டியது. வேட்பாளர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள், கடைக்கோடி தொண்டர்கள் வரை பலரும் வாக்கு கேட்டு மக்களை நேரடியாக சந்தித்தனர். 

Continues below advertisement

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 4 முனை போட்டி 

தமிழ்நாடு அரசியலில் இம்முறை புயலை கிளப்பும் வகையில் 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்தது. நாம் தமிழர்  கட்சி வழக்கம்போல தனித்து போட்டியிட்டது. அதைவிட பெரும் எதிர்பார்ப்பாக நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி தேர்தலில் தனித்து போட்டியிட்டார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் இம்முறை தேர்தலில் வாக்குகளை பிரித்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் மட்டுமல்லாமல் களத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், அரசியல் ஆய்வாளர்கள் என பலரும் கணித்தனர். 

 

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பது யார்? 

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் 145-160 தொகுதிகளில் வென்று திமுகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் தெரிவித்துள்ளது. அதிமுகவுக்கு 50-65 இடங்களும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 13-18 வரை இடங்களும், பிற கட்சிகளுக்கு 5-8 தொகுதிகள் வெல்ல வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.