பாஜகவில் சேர்ந்த புதுமுகங்கள் அனைவரும் தோல்வியை தழுவியுள்ளனர். காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பூ தோல்வியை தழுவினர்.


ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு கர்நாடக சிங்கமாய் கர்ஜித்து அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியை தழுவினார்.


திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த சரவணன் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜகவில் சேர்ந்தார். சேர்ந்த உடனேயே சீட் கொடுக்கப்பட்டது. ஆனால் அவரும் தோல்வியை தழுவினார்.


பாஜக தமிழக தலைவராக நியமிக்கப்பட்ட முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டார். இழுபறியாகவே சென்ற முடிவுகள் கடைசியாக முருகனுக்கு எதிராக அமைய தோல்வியை தழுவினார்.




குஷ்பூ:


திமுகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்து பயணித்து வந்தவர் குஷ்பூ. திடீரென காங்கிரசின் மீது குற்றச்சாட்டுகளை வைத்த அவர், பாஜகவில் கடந்த அக்டோபரில் சேர்ந்தார். காங்கிரசின் தனக்கு மரியாதை இல்லை என்ற குற்றச்சாட்டை வைத்த குஷ்பூவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் வாய்ப்பு கொடுத்தது பாஜக. திமுக சார்பில் மருத்துவர் எழிலன் போட்டியிட்டார். அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதியாக மாறியது ஆயிரம் விளக்கு. ஆனால் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். எழிலன் 71867 வாக்குகளையும் குஷ்பூ 39405 வாக்குகளையும் பெற்றனர்.


அண்ணாமலை :


கர்நாடக சிங்கம் என்ற அடைமொழியுடன் வலம் வந்த அண்ணாமலை புதிய விஷயங்களில் கவனம் செலுத்த போவதாக கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். ரஜினியுடன் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவில் சேர்ந்தார். சேர்ந்ததுமே அண்ணாமலைக்கு துணைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அவரும் தனது பகுதியான கரூரில் களப்பணிகளில் ஈடுபட்டார். அரவக்குறிச்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது பாஜக. அவரை எதிர்த்து போட்டியிட்ட இளங்கோ 93369 வாக்குகள் பெற்றார். அண்ணாமலை 68553 வாக்குகள் பெற்றார்.




சரவணன் :


மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சரவணன். மீண்டும் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்காததால் பாஜகவில் சேர்ந்தார். தனது பணிகள் மூலம் சொந்த மக்கள் செல்வாக்கு இருந்ததால் ஜெயித்து விடலாம் என சரவணன் நினைத்திருந்தார். ஆனால் திமுக வேட்பாளர் தளபதி 70 ஆயிரம் வாக்குகளை பெற்றார். சரவணனால் 50 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. இதனால் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.




எல்.முருகன்


தேசிய பட்டியிலின ஆணைய தலைவராக இருந்தவர் எல்.முருகன். தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்டதால் தலைவரானார் முருகன். பாஜக தமிழக சட்டமன்றத்துக்குள் நுழையும் என சவால் விட்டு இந்த தேர்தலை சந்தித்தார். தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் திமுக வேட்பாளர் கயல்விழியிடம் சுமார் 1500 வாக்குகளில் தோல்வியை சந்தித்தார். தாராபுரம் தொகுதியில் கடைசி நேர குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.