தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், வரலாறு காணாத முடிவுகள் வெளியாகி வருகின்றன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் விஸ்வரூபமெடுத்து, பலரின் வாக்குகளை தட்டித் தூக்கியுள்ளது. அந்த சுனாமியில் சிக்கியவர்களில் சீமானும் ஒருவர்.
ஆம், முந்தைய தேர்தல்களில் வழக்கமாக 3-ம் இடத்திலோ அல்லது பல இடங்களில் 2-ம் இடத்தையோ பிடித்து, முக்கிய கட்சிகளின் வெற்றி, தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்துவார். ஆனால், இந்த முறை, நாம் தமிழர் கட்சி மொத்தமாக முடித்துவிடப்பட்டுள்ளது. 229 இடங்களில் அவரது கட்சி 4-ம் இடத்திலும், பல இடங்களில் 5-ம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.
சரிந்த நாம் தமிழரின் வாக்கு வங்கி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் இதுவரை காணாத வித்தியாசமான முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற பெரும்பாலான கருத்துக் கணிப்புகளை தவிடுபொடியாக்கி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி முகத்தில் உள்ளது. 100 தொகுதிகளுக்கும் மேல் தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில், அதிமுகவும், திமுகவும் மாறி மாறி இரண்டாம் இடத்திற்கு மல்லுக்கட்டி வருகின்றன.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், சீமானின் நாதக ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறாதது மட்டுமல்ல, அவர்கள் 4-வது மற்றும் 5-வது இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளதுதான். இதன் மூலம், நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி பெருமளவில் சரிந்துள்ளது தெரிகிறது.
பல தேர்தல்களை சந்தித்துள்ள நாம் தமிழர் கட்சி, 7 சதவீதம் முதல் 8 சதவீத வாக்கு வங்கியை வைத்திருந்தது. ஆனால், இந்த தேர்தலில் அது பாதிக்கும் மேல் குறையும் போல் தெரிகிறது.
காரைக்குடியில் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட சீமான்
இவ்வளவு ஏன், சீமான் தான் போட்டியிட்ட சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில், 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். போகிற போக்கை பார்த்தால், அவருக்கு டெபாசிட் கிடைக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. அந்த தொகுதியில், தவெக-வின் டாக்டர் பிரபு முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியின் மாங்குடி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
விஜய் வரவால் செல்வாக்கை இழந்த சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், கடந்த 15 வருடங்களாக திராவிட கட்சிகளை விமர்சித்து, அரசியல் செய்துவந்தார். இளைஞர்களை கவரும் வகையில் ஆவேசமாக பேசும் சீமானின் பேச்சை கேட்பதற்கென்றே இளசுகள் கூட்டம் கூடும்.
ஆனால், அதே பாணியில், திராவிட கட்சிகளை விமர்சித்து களத்திற்கு வந்த விஜய், வேறு மாற்று கட்சி கிடைக்காமல் சீமானுக்கு ஆதரவு கொடுத்து வந்த இளைஞர்களை தன் பக்கம் இழுத்துள்ளார். அதோடு, புதிய வாக்காளர்களும் விஜய்யின் பக்கம் வந்ததால், தற்போது அவர் இமாலய வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறார்.
விஜய்யை சாதாரணமாக பேசிவிட்ட சீமான்
விஜய் அரசியலுக்கு வந்த ஆரம்ப காலகட்டத்திலும் சரி, தேர்தலுக்கு சிறிது நாட்கள் முன்பு வரையிலும் கூட, சீமானிடம் விஜய்யின் அரசியல் வரவு பற்றிய கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டன.
ஆரம்பத்தில், அவரை வரவேற்பதாகக் கூறுவந்த சீமான், எப்படியாவது விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதுபோல் சில கருத்துக்களை கூறி வந்தார். ஆனால், விஜய் அதை கண்டுகொள்ளாத நிலையில், அவரை விமர்சிக்கத் தொடங்கினார்.
கூட்டணி குறித்து பின்னர் கேட்கப்பட்டபோது, அவருக்கு வேண்டுமானால் வந்து கேட்கட்டும் என்று விஜய்யை குறைத்து எடைபோட்டு பேசினார். ஆனால், இப்போது அந்த விஜய்தான் இவரது கட்சிக்கே எமனாக வந்துள்ளார். இதுவரை, மாற்று அரசியலின் முகமாக பார்க்கப்பட்ட சீமானின் இடத்தை, அசால்ட்டாக பிடித்துள்ளார் விஜய்.
இனி என்ன செய்வார் சீமான்.?
விஜய்யின் எழுச்சி தற்போது சீமானின் அரசியலுக்கே ஆப்பு வைக்கும் அளவிற்கு வந்துள்ளது உண்மைதான். அதனால், தன்னுடைய அரசியல் கணக்குகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தல் சீமான் உள்ளார். இதுவரை கூட்டணிக்கு செல்ல மாட்டேன் என்று மார்தட்டி வந்த அவர், இனி தேர்தலை கூட்டணி இல்லாமல் சந்திப்பது மிகவும் கடினம் தான்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட்டணி இல்லாமல் தான் தேர்தலை சந்திப்பேன் என்று வீர வசனம் பேசுவதை விட்டுவிட்டு, இனி வரும் காலங்களில் வேறுவிதமான வியூகங்களை அமைத்தால் மட்டுமே அவர் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியும். ஏனென்றால், அதற்கான கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.
