தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரும் என்று 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தபின் கமல் பேட்டி அளித்துள்ளார். 

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இன்று வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், காலை 11 மணிக்கு 37.56% வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த நிலையில் காலையில் இருந்தே தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடிகர்கள் ரஜினி, கமல், சிவக்குமார், சத்யராஜ், அர்ஜூன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் வாக்களித்தனர்.

வாக்களித்த பிரபலங்கள் 

அஜித் முதல் ஆளாக நின்று வாக்களித்தார். தவெக தலைவர் விஜய் நீலாங்கரை தொகுதியில் வாக்களித்தார். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, முன்னாள் ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன், தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் சென்று வாக்களித்தார்.

சென்னை எல்டாம்ஸ் ரோடு, திருவள்ளுவர் சாலை சந்திப்பில் இருக்கும் சென்னை உயர்நிலைப் பள்ளியில், காலை 8.30 மணியளவில், தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வருமா

வாக்களித்த பிறகு செய்தியாளர்கள் கமலிடம், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வருமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, ’’மாற்றம் வந்துட்டே இருக்கு’’ என்று கமல் பதிலளித்தார்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவரான கமல், இவ்வாறு கூறியுள்ளது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.