TN Assembly Election 2026: தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, தனி வாக்கு வங்கி வைத்துள்ள நாம் தமிழர் மற்றும் அரசியல் களத்தில் புதியதாக உள்ளே வந்துள்ள விஜய்யின் தவெக இடையே கடும் போட்டி நிலவியது. 

Continues below advertisement

திமுக-வில் உள்ளடி:

ஆளுங்கட்சியான திமுக மீது மிகப்பெரிய அதிருப்தி அலை இல்லாவிட்டாலும் விஜய்யின் வருகை, எதிர்க்கட்சியின் கூட்டணி ஆகியவற்றில் பெரியளவு ஆதரவு அலையும் இல்லாத சூழலே இருந்தது. இந்த சூழலில், இந்த தேர்தலில் களமிறங்கிய திமுக வேட்பாளர்களில் பலரும் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்களாக, எதிர்கால திமுக ஆளுமைகளாக களமிறங்கினர். 

இது மூத்த அமைச்சர்கள் சிலருக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததாக தொடக்கம் முதலே தகவல் வெளியாகி வந்தது. இந்த சூழலில், தேர்தல் பரப்புரையின்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் திமுக வேட்பாளர்கள் சிலருக்கு போதிய ஆதரவை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் வழங்கவில்லை என்றும், குறிப்பாக பரப்புரையின் கடைசி 3 நாட்களில் எந்த ஒத்துழைப்பும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

Continues below advertisement

நேரில் அழைத்து விசாரித்த ஸ்டாலின்:

இதுதொடர்பாக, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் வேட்பாளர்கள் உதயநிதி ஸ்டாலினிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அப்போது, அவரும் இதுதொடர்பாக ஸ்டாலினிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, வருத்தத்தை தெரிவித்ததாக கூறப்படும் வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் அறிவாலயத்திற்கு அழைத்துள்ளார்.

அப்போது, அறிவாலயத்தில் அந்த வேட்பாளர்கள் அனைவரிடமும் பேசி அவர்களின் குறைகளை மு.க.ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். அப்போது, வேட்பாளர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், அமைச்சர்கள் சிலரும் ஒத்துழைக்கவில்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அமைச்சர்கள் மீது புகார்:

அவர்களில் அமைச்சர்கள் அன்பரசன், ஆவடி நாசர், சேகர்பாபு உள்ளிட்டோர் மீதும் புகார்கள் கூறப்பட்டுள்ளது. இதனால், மு.க.ஸ்டாலின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சிலர் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளார். தேர்தல் முடிவுகளில் அது பிரதிபலித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் சில இடங்களில் கட்சியினர் சிலர் எதிர்பார்த்த அளவிற்கு தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை என்றும் புகார்கள் எழுப்பப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகிய நிலையில், விஜய் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமையுமா? என்ற பல்வேறு கேள்விகளும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

TN Election Vote Counting: வாக்காளர்களே! ஓட்டுக்கள் எப்படி எண்ணப்படுகிறது தெரியுமா?