காங்கிரஸ் கட்சியை பொருத்த வரைக்கும் எங்களுக்கு மரியாதை தான் முக்கியம் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இடங்களும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு போர்க்கோடி தூக்கிய காங்கிரஸ் கட்சியை பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் திமுக கூட்டணியில் தக்க வைத்தது. அதேசமயம் கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இம்முறை 40 தொகுதிகளை கேட்டது. ஆனால் 28 தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி சார்பில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதில் விருதுநகர் மாவட்ட எம்.பி.,மாணிக்கம் தாகூர் உறுதியாக இருந்தார். எனினும் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூரிடம், திமுகவிடம் மதுரை வடக்கு தொகுதியை கேட்டுப் பெறுவோம் என சொன்னீர்கள். கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி அங்கு போட்டியிடுகிறதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தொகுதி பங்கீடு குழு சென்று அதுதொடர்பாக பேசும்போது அது பற்றி தெரிய வரும் என பதிலளித்தார்.
தொடர்ந்து அவரிடம், “தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் போட்டியிடுகிறது. அதேசமயம் 39 தொகுதிகள் கொண்ட பட்டியலும், காங்கிரஸ் வேட்பாளர்களின் உத்தேசப்பட்டியலும் வெளியானதாக தகவல் உலா வருகின்றது. வேட்பாளர் தீர்மானம் செய்து விட்டோமா?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு, “இதனை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மறுத்திருக்கிறார். உலா வரும் லிஸ்ட் பொய் செய்தியாகும். இரண்டாவது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மற்றும் 28 தொகுதிகளின் பட்டியல் சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்களிடமும் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலோசனை நடத்தியுள்ளார் என கூறினார்.
அடுத்ததாக, 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 17 உறுப்பினர்கள் கிடைத்தார்கள். இந்த முறை அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படுகிறதா அல்லது புதுமுகங்கள் இடம் பெறுவார்களா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், “இதில் நான் கருத்து சொல்வது முக்கியமல்ல. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் கருத்து கேட்கப்பட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் அனுமதிப் பெற்று அதிகாரப்பூர்வமாக தகவல்களை தெரிவிப்பார்கள் என கூறியுள்ளார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி பெரும் சிரமங்களுக்கு இடையே அமைந்துள்ளது. தொண்டர்கள் எல்லாம் ஒற்றுமையாகி விட்டார்களா என்ற கேள்விக்கு, “தொண்டர்களுக்கு மரியாதை கொடுத்தால் ஒற்றுமையாகி விடுவார்கள். காங்கிரஸ் கட்சியை பொருத்த வரைக்கும் எங்களுக்கு மரியாதையும், அன்பும் தான் முக்கியம். நீங்கள் எனக்கு மரியாதை கொடுக்காவிட்டால் கண்டுகொள்ளாமல் சென்று விடுவேன். மரியாதை கொடுத்தால் நின்று உங்களிடம் பேசுவேன் என மாணிக்கம் தாகூர் பதிலளித்துள்ளார்.
