தமிழ்நாட்டில் இதுவரையில் நான்கு முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்சிகள் 1976, 1980, 1988, மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்தன.
TN Election 2026: கருணாநிதி, எம்ஜிஆரின் ஆட்சியை பறித்த நிகழ்வுகள் - சட்டப்பேரவையில் லத்தி சார்ஜ், காங்., அடாவடி
TN Election 2026 President Rule: தமிழ்நாட்டில் எத்தனை முறை மாநில அரசு கலைக்கப்பட்டு, குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

TN Election 2026 President Rule: தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இரண்டு முறை மத்திய அரசால் கலைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலத்தின் கடந்த கால தேர்தல் வரலாறு மற்றும் தரவுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அந்த வகையில் இங்கு எத்தனை முறை ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது? அதற்கான காரணம் என்ன? பதவியை இழந்தவர்கள் யார்? என்பன போன்ற பல முக்கிய கேள்விகளுக்கான பதில்களை இன்று அறியலாம். 1976ம் ஆண்டு தொடங்கி 1991ம் ஆண்டு வரையில் என பதினைந்தே ஆண்டுகளில் 4 முறை தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, 4 முறை தேர்தலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எப்போது குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்?
சுருக்கமாக சொன்னால், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, சட்டமன்றத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாதபோது அல்லது மத்திய அரசின் முக்கிய உத்தரவுகளை பின்பற்ற தவறுவது என, அரசியலமைப்பின் படி மாநில அரசு செயல்பட முடியாதபோது, குடியரசு தலைவர் ஆட்சி (பிரிவு 356) அமல்படுத்தப்படுகிறது. அப்போது, ஆளுநரை கொண்டு குறிப்பிட்ட மாநிலத்தை குடியரசு தலைவர் நேரடியாக நிர்வகிப்பார்.
தமிழ்நாட்டில் எப்போது குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது?
- சுதந்திர இந்தியாவில் 1976ம் ஆண்டு முதல்முறையாக தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இது 31, ஜனவரி 1976-ல் தொடங்கி 29 ஜுன் 1977 வரை அதாவது 515 நாட்கள் நீடித்தது
- இரண்டாவது முறையாக 1980ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி தொடங்கி ஜுன் 8ம் தேதி வரை அதாவது 111 நாட்கள் நீடித்தது.
- மூன்றாவது முறையாக 1988ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி தொடங்கி 1989ம் ஆண்டு ஜனவரி 26 வரையில் அதாவது 362 நாட்கள் நீடித்தது
- நான்காவது மற்றும் கடைசியாக 1991ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி தொடங்கி அதே ஆண்டின் ஜுன் 23ம் தேதி வரையில் அதாவது 144 நாட்கள் தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது
ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் ஆயிரத்து 132 நாட்கள் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்துள்ளது.

தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமலானதற்கான காரனங்கள்
1. எமர்ஜென்சியால் வந்த வினை
இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு அவசர சட்டத்தை அமல்படுத்தியதை எதிர்த்ததன் காரணமாக, முதல்முறையாக தமிழ்நாட்டில் ஆட்சி கலைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனால் சுதந்திர இந்தியாவில் ஆட்சி கலைப்பால் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த முதல் நபராக கருணாநிதி உருவெடுத்தார்.
2. விவசாயிகள் போராட்டத்தால் ஆட்சியை இழந்த எம்.ஜி.ஆர்.,
1980ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வந்தது. அதேநேரம், அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் காங்., - அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இது மாநில அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்க, எம்.ஜி.ஆர்., தலைமையிலான ஆட்சியை கலைக்க வேண்டும் என பிரதமர் இந்திரா காந்திக்கு கருணாநிதி தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாக கூறப்பட்டது. முடிவில், மின்சார மானியம் கோரிய விவசாயிகளின் போராட்டம் ஆகியவற்றை குறிப்பிட்டு, அரசு இயந்திரம் முறையாக செயல்பாடவில்லை என கூறி எம்.ஜி.ஆர்., ஆட்சி கலைக்கப்பட்டது.

3. விடுதலைப் புலிகளால் வெடித்த சர்ச்சை
1990ம் ஆண்டு சென்னையில் விடுதலைப் புலிகளால் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்தியில் சந்திரசேகர் தலைமையிலான மைனாரிட்டி ஆட்சிக்கு ஆதரவளித்து வந்த ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ், தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்க அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இறுதியில் மாநில நிர்வாகம் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தவறியதாகவும், மாநிலத்தில் போராளிக் குழுக்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதாகவும் குற்றம் சாட்டி கருணாநிதி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது.
4. எம்.ஜி.ஆர்., மறைவால் கலைந்த ஆட்சி
1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., மறைவிற்கு பிறகு ஆளும்கட்சியாக இருந்த அதிமுக இரண்டாக உடைந்தது. ஜானகி ராமச்சந்திரன் முதலமைச்சராக பெறுப்பேற்று, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடந்தது. அப்போது ஜெயலலிதா ஆதரவாளர்களுடன் வெடித்த மோதலால், வரலாற்றில் முதல்முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே லத்தி சார்ஜ் நடத்தப்பட்டது. அதன் முடிவில் ஜானகி ராமச்சந்திரனின் 24 நாட்கள் மட்டுமே நீடித்த ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
குடியரசு தலைவர் ஆட்சி - சுவாரஸ்ய தகவல்கள்
- அதிக முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் - மணிப்பூரில் 11 முறை, உத்தரபிரதேசத்தில் 10 முறை
- நீண்டகாலம் குடியரசு தலைவர் ஆட்சி - ஜம்மு & காஷ்மீரில் சுமார் 15 ஆண்டுகளும், பஞ்சாபில் சுமார் 10 ஆண்டுகளும் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்துள்ளது
- முதல்முறையாக குடியரசு தலைவர் ஆட்சி- சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக 1951ம் ஆண்டு பஞ்சாபில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது
- குடியரசு தலைவர் ஆட்சி அமலாகாத மாநிலங்கள் - சத்தீஸ்கர், தெலங்கானா
Frequently Asked Questions
தமிழ்நாட்டில் எத்தனை முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது?
எந்த அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது?
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாதது, அல்லது மத்திய அரசின் உத்தரவுகளைப் பின்பற்றத் தவறுவது போன்ற காரணங்களால் அரசியலமைப்பின் படி மாநில அரசு செயல்பட முடியாதபோது குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் முதல் குடியரசு தலைவர் ஆட்சி எப்போது, எவ்வளவு காலம் நீடித்தது?
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் முதல் குடியரசு தலைவர் ஆட்சி 1976 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி, 1977 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி வரை 515 நாட்கள் நீடித்தது.
தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமலானதற்கான சில முக்கிய காரணங்கள் யாவை?
அவசர நிலை எதிர்ப்பு, விவசாயிகள் போராட்டம், விடுதலைப் புலிகளால் ஏற்பட்ட சர்ச்சை, மற்றும் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அதிமுக உடைந்ததால் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்றவை தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமலானதற்கான முக்கிய காரணங்களாகும்.






















