தமிழகமே எனது வீடு... மதுரையை முதன்மை நகரமாக மாற்றுவதே லட்சியம்: அதிமுக வேட்பாளர் சுந்தர் சி பேட்டி.

வேட்பாளர் சுந்தர் சி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்
 
மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தர் சி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொகுதி வளர்ச்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர் சி....,” இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தபோது மக்களிடம் இருந்த எழுச்சியும், இரட்டை இலை சின்னத்திற்கு அவர்கள் அளிக்கும் ஆதரவும் எனக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது. 200 சதவீதம் மதுரை மத்திய தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தொகுதிக்குத் தேவையான எந்தவொரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. சுகாதாரம், தூய்மையான குடிநீர், சாலை வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் போன்ற எளிய மக்களின் தேவைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகத்திலும், அரசுப் பணிகளிலும் ஊழல் மற்றும் லஞ்சம் மலிந்து கிடப்பதாக அவர் சாடினார்.
 
மதுரைக்கும் சுந்தர் சி-க்கும் சம்பந்தமே இல்லை என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி விமர்சித்திருந்தது குறித்துக் கேட்டபோது,
 
கனிமொழி அவர்கள் தூத்துக்குடிக்காரரா? அவரும் சென்னையைச் சேர்ந்தவர் தான். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் அவர் அங்கு சென்றார். நல்லது செய்ய நினைப்பவர்களுக்கு ஊர் ஒரு தடையல்ல. தனது தந்தை அரசு ஊழியராக இருந்ததால் ஈரோட்டில் பிறந்ததாகவும், கோவையில் வளர்ந்து சென்னையில் பணியாற்றியதாகவும் குறிப்பிட்டார். தனது தாயாரின் பூர்வீகம் திருச்சி என்றும், தந்தையின் பூர்வீகம் பழனி என்றும் தெரிவித்த அவர், தமிழகம் தான் எனது வீடு, இனி மதுரை தான் எனது ஊர் என்று கூறினார். இதற்காக மதுரையிலேயே வீடு எடுத்து தங்கியிருப்பதாகவும், மாதத்தில் 15 நாட்கள் மக்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.
 
நாளை முதல் தொகுதி முழுவதும் முழு வீச்சில் பிரசாரம்
 
தமிழர்களின் தலைநகர் சென்னை என்றால், தமிழின் தலைநகர் மதுரை. இழந்த பெருமையை மதுரைக்கு மீண்டும் பெற்றுத் தருவதே எங்களது நோக்கம். மதுரையை லஞ்சம், ஊழலற்ற முதன்மை நகரமாக மாற்ற எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய மக்கள் ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்தச் சந்திப்பின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் என்.டி.ஏ  கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். நாளை முதல் தொகுதி முழுவதும் முழு வீச்சில் பிரசாரம் தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.