தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நீர்ப்பாசன திட்டங்கள், வேலைவாய்ப்பு, ரயில் திட்டம் என லட்சியங்களோடு வந்திருக்கிறேன் என தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி கூறியுள்ளார்.

 

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸினுடைய மனைவி சௌமியா அன்புமணி இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்திருந்தார். அப்பொழுது வரும்வரையில் தொப்பூர் சுங்கச்சாவடி அருகே பாமக மற்றும் கூட்டணி கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து தர்மபுரி நகரில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கட்சித் தொண்டர்களை சந்தித்தவாறு காரில் ஊர்வலமாக வந்தனர். இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் கி.சாந்தியிடம் தனது வேட்புமணுவை தாக்கல் செய்தார். அப்பொழுது பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஜிகே மணி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.



 

வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி பேசியதாவது:


நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்த எங்களுடைய நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அய்யா அவர்களின் பாதங்களில் சிறந்தாழ்ந்து என்னுடைய நன்றிகளையும் வணக்கத்தையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


நான் சில லட்சியத்தோடு வந்து உள்ளேன். அதில் காவிரி உபரிநீர் திட்டம் செயல் படுத்துவது  முதல் திட்டம். இதனால் பத்தாண்டுகளுக்கு மேலாக தர்மபுரி மாவட்ட மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தருமபுரி மாவட்டம் மக்கள் அனைவரும் காவிரி உபரிநீர் திட்டம் வரவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுக்காக மிகப்பெரிய போராட்டங்களையும் பத்து லட்சம் கையெழுத்துகளையும் வாங்கி கொடுத்துள்ளோம். இந்த திட்டம் கொண்டு வருவது முதல் நோக்கம். இதனால் மாவட்ட மக்கள் தண்ணீர் பிரச்சினை தீரும். மக்களின் வாழ்வாதாரம் பெருகும். இந்த திட்டத்தை குறிக்கோளாக நிறைவேற்றுவேன்.

 

இரண்டாவதாக வேலை வாய்ப்பு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 3 லட்சம் இளைஞர்கள்  வெளி மாநிலங்களுக்கு கூலி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கு சிப்காட் போன்ற தொழிற்சாலையில் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை விரைவாக செயல்படுத்த வேண்டும்.  அதற்கான முயற்சி அதற்காக  கடினமாக உழைப்பேன். தருமபுரி மாவட்டத்தில் அதிகமாகவுள்ள தக்காளி, புளி, மாம்பழம் பட்டுக்கூடு, பருத்தி, போன்ற அனைத்தையும்  குளிர்பதன கிடங்கு அமைத்து மதிப்பு கூட்டி விற்பனை செய்ய  முயற்சி மேற்கொள்வேன்.



 

தருமபுரி மாவட்டம் அதிகமாக சிறுதானிய உற்பத்தி செய்வதில் முதன்மையாக இருக்கிறது. தருமபுரி-மொரப்பூர் ரயில்வே திட்டம் 80 ஆண்டு கால கனவு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனையோ முறை சந்தித்து மத்திய அரசை சந்தித்து பேசிஅடிக்கல்  நாட்டியிருக்கிறார்கள். அதற்கான நிதி ஒதுக்கீடு பெற்று தந்திருக்கிறார்கள். தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு நீர்ப்பாசன உபரி நீர் திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும். என்னேக்கோள் புதூர், வாணியாறு உபரிநீர் திட்டம், ஆணைமடுவு அணைக்கட்டு திட்டம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன். இங்கு தேர்தலில் நின்று போட்டியிடுவது எனக்கு ஒரு பெரிய பிரச்சனை இல்லை. மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது. பெண்கள் ஆதரவோடு தைரியமாக இந்த தேர்தலை எதிர்கொள்வேன், தருமபுரியில் ஒரு முதல் பெண் போட்டியிடுகிறேன், தைரியமாக போட்டிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.