விழுப்புரம்: தமிழ்நாடு 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை சந்தித்து சசிகலா தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தங்கள் கூட்டணிக் கட்சிகளை இறுதி செய்து தொகுதிப் பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாமக தற்போது இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. கட்சிக்கு உரிமை கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவின் விசாரணை தேர்தலுக்கு பின்னர் ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் ராமதாஸுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து விவாதிக்க நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் ராமதாஸ் நேற்று முன்தினம் புதன்கிழமை ஆலோசனை நடத்தியிருந்தார். இதனிடையே, அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா கடந்த வாரம் தொடங்கியிருந்தார்.
இந்த நிலையில், தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்து தற்போது கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சசிகலா ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து கூட்டணி குறித்து இருவரும் இணைந்து அறிவிப்பு வெளியிட உள்ளனர்.
குறிப்பாக மருத்துவர் ராமதாஸ் தலைமையில் ஒவ்வொரு முறை நடைபெறும் நிர்வாக குழு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்து கொண்டிருந்த சேலம் எம்எல்ஏ அருள் கடந்த சில நாட்களாக திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்று மருத்துவர் ராமதாசை சசிகலா கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் ஜிகே மணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில் எம்எல்ஏ அருள் மட்டும் புறக்கணித்துள்ளது தற்பொழுது பரபரப்பாகியுள்ளது.
புதன்கிழமை அன்று நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்திற்கு சேலம் அருள் எம்எல்ஏ வந்தபோது, சேலத்தில் சுயேட்சையாக போட்டியிடப் போகிறார்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு காலம் தான் முடிவு செய்யும் என கூறிவிட்டு தைலாபுரம் தோட்டத்திற்கு உள்ளே சென்ற அவர் நிர்வாக குழு கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார். இந்த சூழ்நிலையில்தான் தற்பொழுது ராமதாசுடன் சசிகலா நடத்தும் கூட்டணி பேச்சு வார்த்தையில் பங்கேற்காத நிலையில் அவர் திமுக விற்கு செல்ல உள்ள தகவல் வெளியாகி தைலாபுரம் தோட்டத்தில் பரபரப்பாகியுள்ளது.
