மனைவி சங்கீதாவின் விவாகரத்து விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை விமர்சித்த அக்கட்சி நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் திடீரென திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

Continues below advertisement

விஜயை கண்டித்த ரஞ்சனா நாச்சியார்

பாஜகவில் இருந்து விலகி ரஞ்சனா நாச்சியார் தமிழக வெற்றிக் கழகத்தில் செயல்பட்டு வந்தார். இதனிடையே சமீபத்தில் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விவகாரத்து வழக்கு தொடர்ந்தார். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தினர் வருத்தமடைந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தவெக மகளிர் தின விழாவில் பேசிய விஜய், தனிப்பட்ட விஷயம் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள்  என் விஷயத்துக்காக உங்கள் நேரத்தை செலவிடும் அளவுக்கு அது ஒர்த் இல்லை என தெரிவித்தார். 

விஜயின் இந்த பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் பயணித்த ரஞ்சனா நாச்சியாரும் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். தொடர்ச்சியாக செய்தியாளர் சந்திப்பு, ஊடகத்தில் நேர்காணல் என பங்கேற்று விஜயை விமர்சித்தார். ரஞ்சனாவுக்கு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் இம்மாதிரியான குற்றச்சாட்டை விஜய் மீது முன்வைக்கிறார் என தவெக தொண்டர்கள் விமர்சித்தனர். 

Continues below advertisement

திமுகவில் இணைந்த காரணம்

இந்நிலையில் ரஞ்சனா நாச்சியார் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நான் என்னை திமுகவில் இணைத்துக் கொண்டேன். பெரியாரின் சிந்தனை, அண்ணாவின் வழிகாட்டுதல், கருணாநிதியின் பாரம்பரியம் இவையெல்லாம் கலந்த இயக்கம் தான் திமுக. இதில் பயணிப்பது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும், பெருமையாகவும் பார்க்கிறேன். மக்கள் பணி என்பது மிகப்பெரிய பொறுப்பு.

அரசியலில் பெண்கள் பயணிப்பது பாதுகாப்பும், பொறுப்பும் இருக்க வேண்டிய விஷயமாகும். அந்த மாதிரி சூழலில் நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன். பெண்களுக்கான பாதுகாப்பை திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியாலும் கொடுக்க முடியாது. தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுப்பதற்காக தான் இந்த தேர்தலில் வருகை தருகிறார்கள் என நினைக்கிறேன். பெண்களை அவமதிப்பதை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். அந்த வகையில் தவெகவில் இருந்து விலகியுள்ளேன்” என ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலத்தின் சுயேட்சை எம்எல்ஏ அங்காளன், முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மகன் விக்னேஷ் உள்ளிட்டோரும் திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.