ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி 15 வார்டுகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் சாயல்குடி பேரூராட்சி சுயேச்சைகளின் கோட்டையாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி அன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டத்திலும் 4 நகராட்சி, 7 பேரூராட்சிகள் என மொத்தம் 11 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் பதிவான ஓட்டுக்கள் நேற்று காலை  எண்ணப்பட்டது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன் பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் சுயேச்சைகள் தான் வெற்றி பெற்றுள்ளனர்.


இதனால், சாயல்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். கட்சி சார்ந்த வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. இதன்மூலம் சாயல்குடி பேரூராட்சி சுயேச்சைகளின் வசமாகி உள்ளது. இந்த பேரூராட்சியில் சுயேச்சைகள் அனைவரும் ஒன்றிணைந்து தலைவர், துணை தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் அரசியல் கட்சி சாராத நபர்கள் பேரூராட்சியை நிர்வகிக்க உள்ளனர்.




சாயல்குடி முதல் வார்டில் மாரியப்பன், 2வது வார்டில் பானுமதி, 3வது வார்டில் இந்திரா, 4வது வார்டில் சண்முகத்தாய், 5வது வார்டில் கோவிந்தன், 6வது வார்டில் மாணிக்கவள்ளி, 7 வது வார்டில் முகமது ஜின்னா, 8 வது வார்டில் அழகர்வேல்பாண்டியன் 9வது வார்டில் ஆபிதா பீவி, 10வது வார்டில் குமரையா, 11வது வார்டில் அமுதா, 12வது வார்டில் இந்துராணி, 13வது வார்டில் மணிமேகலை, 14வது வார்டில் இரா.காமராஜ், 15வது வார்டில் மாணிக்கவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் சுயேச்சைகள் ஆவார்கள்.




 


இந்த பேரூராட்சியில் மொத்தம் 15 உறுப்பினர் பதவிகளுக்கு 50 பேர் போட்டியிட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஒருவர், நாம் தமிழர் கட்சி சார்பில் 10 பேர், எஸ்டிபிஐ, அமமுக சார்பில் ஒருவர் என மொத்தம் 13 பேர் மட்டுமே கட்சி சார்ந்தவர்கள். மற்ற 38 பேரும் சுயேச்சைகள் ஆவார்கள். இந்த பேரூராட்சியில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. சுயேச்சைகள் அதிகமாக வெற்றி பெறுவார்கள் என்பதை அறிந்தே பெரும்பாலும் இந்த பேரூராட்சியில் பெரிய கட்சிகள் சார்பில் இங்கு வேட்பாளர்கள் நிறுத்த ஆர்வம் காட்டப்படவில்லை எனகுறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2011ல் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளில் 13 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். கடந்த முறை 6வது வார்டில் அதிமுகவும், 13வது வார்டில் தேமுதிகவும் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை புதிதாக வரலாறு படைக்கப்பட்டுள்ளது. அதாவது பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


'புறக்கணிக்கப்படுகிறதா சாயல்குடி'


இது பற்றி ஊர் மக்களிடம் பேச்சுக்கொடுத்தோம்., இந்த சாயல்குடி பேரூராட்சி 1985 ஆம் ஆண்டிலிருந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து  பேரூராட்சியாகவே இருந்து வருகிறது.    இந்த  பேரூராட்சிக்கு என  எந்த ஒரு அலுவலக  அந்தஸ்தையும் அரசும்  வழங்கவில்லை அரசு அதிகாரிகளும் ஏற்படுத்தி தரவில்லை.  மாவட்டத்தில் ஊராட்சி அந்தஸ்தில்  இருக்கும் நயினார்கோவில் மற்றும் போகலூர் ஆகிய ஊர்கள் தனி யூனியன் அந்தஸ்து பெற்றுவிட்டன, இன்னும் ஒருபடி மேலே சொல்லப்போனால், கடலாடி,திருவாடானை உள்ளிட்ட ஊராட்சி அந்தஸ்தில் உள்ள சிறிய ஊர்கள் கூட தாலுகா அந்தஸ்து பெற்று தாலுகாக்களின்  தலைநகரங்களாகவும் தொகுதி அந்தஸ்தும் அடைந்துள்ளன. தொகுதி சீரமைப்பின்போது கடலாடி தனது தொகுதி அந்தஸ்தை இழந்தது வேறு கதை.




ஆனால் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த சாயல்குடி பேரூராட்சியில் அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கிய இந்த ஊரில், இதுவரை எந்த ஒரு அரசு அலுவலகம் கொண்டுவர எந்த அரசும் முயற்சிக்கவில்லை அரசு அதிகாரிகளும் அதை நினைத்துக்கூட பார்க்கவில்லை என்பது இந்தப் பகுதி பொதுமக்களின் நீண்டகால வருத்தமாக உள்ளது. தொடர்ந்து வரும் ஆட்சியாளர்கள் இந்த பேரூராட்சியை புறக்கணிக்கவே பார்க்கிறார்கள்."இரவில் மருத்துவமனையில் இருக்கும்  நோயாளிக்கு  ஒரு சுடு தண்ணீர் வாங்க கூட டீக்கடை இல்லாத ஒரு ஊர் தனி தாலுகாவாக இருக்கிறது. உருப்படியாக பேருந்து நிலையம் இல்லாத ஊர்கள் கூட சட்டமன்ற தொகுதி அந்தஸ்து பெற்றுள்ளது" என பொறுமுகிறார்கள் இப்பேரூராட்சி பொதுமக்கள்.



மேலும் அவர்கள் பேசுகையில்,எனவே புதிதாக தேர்வாகியிருக்கும் சுயேச்சை கவுன்சிலர்களும் அவர்களால்  வாக்களித்து தேர்வு செய்ய உள்ள சேர்மனும்,  சாயல்குடி பேருராட்சியை  நகராட்சியாக அந்தஸ்திற்கு உயர்த்த உழைக்க வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனென்றால் இந்தப் பகுதிக்கான தனியாக ஒரு அரசு கல்லூரி இல்லை, இன்னமும் இங்கு உள்ள மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையமாகவே இருக்கிறது. இந்த நகருக்கென  தனிப்பெரும் வரலாறு இருந்தும் தொடர்ந்து அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் புறக்கணிக்கப்பட்டு வரும் காரணம் புரியாமல் இப்பகுதி பொதுமக்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். இங்கு வசிக்கும் பொதுமக்களின் வாக்கு மட்டுமே அவர்களின் குறியாக இருக்கிறது.  இப்பகுதியின் வளர்ச்சியில் கொஞ்சம் கூட அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என்பதே பேரூராட்சி வாக்காளர்களின் வருத்தமாக இருக்கிறது.