தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சிப் பூசல், தற்போது அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதிய கட்சி தொடங்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. பாமகவின் தற்போதைய தலைவரான அன்புமணி ராமதாஸ் மற்றும் நிறுவனர் ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நிலவி வரும் கடும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, கட்சி தற்போது இரண்டு பிரிவுகளாகச் செயல்பட்டு வருகிறது. 

Continues below advertisement

புது கட்சி தொடங்கும் ராமதாஸ்

கட்சியின் அதிகாரப்பூர்வப் பொறுப்புகள் மற்றும் 'மாம்பழம்' சின்னம் ஆகியவை அன்புமணி தரப்பின் வசமே நீடிப்பதால், தேர்தல் களத்தில் தங்களது பலத்தை நிரூபிக்க ராமதாஸ் தரப்பு புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக, மாம்பழம் சின்னத்தை முடக்குவதற்கு ராமதாஸ் தரப்பால் மேற்கொள்ளப்பட்ட சட்டப்பூர்வ முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில், இந்த புதிய கட்சித் தொடக்கம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ராமதாஸ் தரப்பு தங்களது புதிய அரசியல் பயணத்தை சசிகலா தலைமையிலான அணியுடன் இணைந்து மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக 18 தொகுதிகளைப் பெற்றுள்ள நிலையில், ராமதாஸின் இந்த அதிரடி முடிவு தேர்தல் களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்சியைப் பதிவு செய்து, அதன் மூலம் பொதுச் சின்னத்தைப் பெற்று வேட்பாளர்களைக் களமிறக்க ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Continues below advertisement

அய்யா பாமக 

இதற்காக, "அய்யா பாட்டாளி மக்கள் கட்சி" என்ற பெயரை முதலில் பரிசீலித்த போதிலும், ஏற்கனவே உள்ள கட்சியின் பெயரோடு ஒற்றுமை இருந்தால் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால், தற்போது "அய்யா பாசறை மக்கள் கட்சி" (அய்யா பாமக) என்ற பெயரைத் தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த புதிய கட்சியை ராமதாஸ் தரப்பின் தலைமை நிலையச் செயலாளராக இருக்கும் அன்பழகனின் மகன் முகிலன் பெயரில் பதிவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 30-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ள நிலையில், அதற்குள் கட்சிப் பதிவு மற்றும் சின்னம் தொடர்பான பணிகளை முடித்து, அய்யா பாசறை மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த ராமதாஸ் ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.