புதுச்சேரி: புதுச்சேரியில் டிரோன் மூலமாக கண்காணித்ததில் பணப்பட்டுவாடா செய்ததாக 5 பேர் சிக்கினர். உங்கள் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்தால் 1950 ஜீரோ என்ற கட்டணம் இல்லாத தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாமென தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார்

Continues below advertisement

புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் முதன்முறையாக 'டிரோன்' (Drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிரடி வேட்டையைத் தொடங்கியுள்ளது.

டிரோன் கேமராவில் சிக்கிய புள்ளிகள்

புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள 30 தொகுதிகளிலும் தலா ஒரு டிரோன் வீதம் மொத்தம் 30 டிரோன்கள் நேற்று முதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த நவீனக் கண்காணிப்பின் மூலம் மண்ணாடிப்பட்டு மற்றும் மங்கலம் தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்த 5 பேர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்.

Continues below advertisement

மண்ணாடிப்பட்டு தொகுதி: திருக்கனூர் பகுதியில் டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்டபோது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் செயல்பட்ட திருமாறன் (36), சிலம்பரசன் (34), மற்றும் டிவின் சக்ரவர்த்தி (30) ஆகிய மூன்று பேரைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த ரூ. 55,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மங்கலம் தொகுதி: முதல்வர் ரங்கசாமி போட்டியிடும் முக்கியத்துவம் வாய்ந்த மங்கலம் தொகுதியில், பறக்கும் படை அதிகாரி லோகநாதன் தலைமையிலான குழுவினர் டிரோன் உதவியுடன் சோதனையிட்டனர். அப்போது ராஜேந்திரன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவர் பணப்பட்டுவாடா செய்தபோது பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 11,300 பறிமுதல் செய்யப்பட்டு, வில்லியனூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் எச்சரிக்கை

இது தொடர்பாக புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"புதுச்சேரி தேர்தல் துறை தொழில்நுட்ப ரீதியாகத் தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளது. டிரோன் கேமராக்கள் மூலம் சந்து பொந்துகள் வரை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்காளர்களைக் கவர சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்."

பொதுமக்கள் புகார் அளிக்க அழைப்பு : தேர்தல் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப் பின்வரும் வசதிகளைப் பயன்படுத்தலாம்:

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1950

செயலி: சி-விஜில் (cVIGIL) மொபைல் ஆப்

நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தலை உறுதி செய்ய பொதுமக்கள் தங்களுக்குத் தெரியும் முறைகேடுகளை அச்சமின்றித் தெரிவிக்கலாம் எனத் தேர்தல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.