தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகரான விஜய் இந்த தேர்தலில் முதன்முறையாக போட்டியிடுகிறார். தமிழ்நாட்டைப் போலவே பாண்டிச்சேரியிலும் தவெக போட்டியிடுகிறது. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் அங்கும் தமிழ் பேசும் மக்களே என்பதால் தவெக மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
வரலாறு காணாத வாக்குப்பதிவு:
பாண்டிச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தவெக தனித்தே போட்டியிடுகிறது. அவர்களுடன் நேயம் மக்கள் கழகம் கூட்டணி வைத்து 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். பாண்டிச்சேரியில் இன்று காலை முதலே இளைஞர்களும், பொதுமக்களும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். குறிப்பாக, பாண்டி்சேரி வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
அதாவது, இன்று நடந்த வாக்குப்பதிவில் 86.92 சதவீதம் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கே பதிவாகிவிட்டது. பாண்டிச்சேரி வரலாற்றில் இதற்கு முன்பு 2006ம் ஆண்டு 86 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியது. அந்த சாதனையை இந்த தேர்தல் முறியடித்துள்ளது. 1977ம் ஆண்டு முதல் பாண்டிச்சேரியில் நடந்த சட்டசபை வரலாற்றிலே இன்று பதிவாகிய வாக்குப்பதிவே அதிகம் ஆகும். -
விஜய்தான் காரணமா?
மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதற்கு முக்கிய காரணம் விஜய் என்று கருதப்படுவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ள விஜய்யின் முதல் தேர்தல் இதுவே ஆகும். மேலும், அவர் வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் சென்று வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பாண்டிச்சேரியின் தேர்தல் முடிவுகள் வரும் மே 4ம் தேதி வெளியாகும். அப்போதுதான் இன்று பதிவான வாக்குகள் விஜய்க்கு கிடைத்ததா? இல்லை அவருக்கு எதிரானதா? என்ற கேள்விக்கு விடை தெரிய வரும். இந்த தேர்தலில் பாண்டிச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தலைமையில் ஒரு அணியும், பாஜக- என்ஆர் காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும் மோதுகின்றனர். அதிமுக மற்றும் நாம் தமிழர் தனித்தனியே போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் எப்படி?
இன்று பாண்டிச்சேரி மட்டுமின்றி அசாம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாண்டிச்சேரியில் வரலாறு காணாத அளவிற்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது போல, தமிழ்நாட்டிலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் மிகப்பெரிய அளவில் வாக்களித்திருப்பது தேர்தல் ஆணையத்திற்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலில் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.