வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்களால் மாநிலம் முழுவதும் பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது.


வாக்குப்பதிவின்போது வன்முறை சம்பவம்


வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோதும் கொலை, வாக்குப்பெட்டி எரிப்பு, மோதல் சம்பவங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. இதனால் வங்காள மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை 696 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தியது. தலைமை அதிகாரியின் கையொப்பம் இல்லாத வாக்குச் சீட்டுகள் மற்றும் வாக்குச் சீட்டின் பின்புறத்தில் ஒட்டப்பட்டிருக்கும் தனிச்சிறப்பு அடையாளமான ரப்பர் முத்திரை ஆகியவை செல்லாதவையாகக் கருதப்படும், அவை செல்லுபடியாகாது என்று ஆணையம் தெரிவித்துள்ளது. PTI வெளியிட்ட தகவல் படி, தேர்தல் தொடர்பான வன்முறைகளில் கிட்டத்தட்ட 18 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



பாஜக நியமித்த குழு


மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலின் போது 18 பேர் கொல்லப்பட்ட நிலையில், மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நான்கு பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை பாஜக திங்கள்கிழமை நியமித்தது. இந்த குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவிடம் விரைவில் அறிக்கை அளிக்கும். நான்கு பேர் கொண்ட குழுவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமை தாங்குவார். இந்த குழுவில் சத்யபால் சிங், ராஜ்தீப் ராய், ரேகா வர்மா ஆகியோர் இடம் பெறுவார்கள்.


தொடர்புடைய செய்திகள்: Vegetables Price: தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம்.. இரட்டை சதத்தில் இஞ்சி, பட்டாணி, சின்ன வெங்காயம்.. மற்ற காய்கறிகளின் விலை பட்டியல் இதோ..


ஆளுநர் போஸ்


மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவின் போது வன்முறை நடந்ததாகக் கூறப்படும் செய்திகளுக்கு மத்தியில், ஆளுநர் சிவி ஆனந்த போஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திங்கள்கிழமை சந்தித்தார், அங்கு மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தலின் போது நடந்த வன்முறை தொடர்பான அறிக்கையை ஆளுநர் சமர்ப்பித்ததாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. கூட்டம் முடிந்தவுடன், போஸ் பேசுகையில், "விடியும் முன் இருக்கும் இருண்ட நேரம் தான் இது, சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருக்கும். இன்று நான் பெறக்கூடிய ஒரே செய்தி - குளிர்காலம் வந்தால் வசந்த காலம் வர இவ்வளவு காலம் ஆகிவிடப்போகிறது? வரும் நாட்களில் நல்லது நடக்கும்," என்றார்.



ஆதாரங்கள் மற்றும் வீடியோ காட்சிகள்


வாக்குப்பதிவின் போது பல ஆயிரம் சாவடிகளில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் ஆதாரங்களை சேகரித்து வருவதாகவும், கல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார். "மறுவாக்கலைப் பரிந்துரைக்கும் 6,000 பூத்களின் பட்டியலை நாங்கள் SEC-யிடம் சமர்ப்பித்துள்ளோம். உண்மையில், திரிணாமுல் காங்கிரஸின் உத்தரவின் பேரில் 18,000 வாக்குச்சாவடிகளில் பொய்யான வாக்குப்பதிவு நடந்துள்ளது. மேலும் ஆதாரங்கள்... வீடியோ காட்சிகள் மற்றும் அனைத்தையும் நாங்கள் சேகரித்து வருகிறோம்," என்று சுவேந்து அதிகாரி PTI இடம் கூறினார். வாக்குப்பெட்டிகளை சேதப்படுத்துதல் மற்றும் அழித்தல் போன்ற பல நிகழ்வுகளும் நாள் முழுவதும் பதிவாகியுள்ளன. கூச் பெஹார் மாவட்டத்தின் தின்ஹாட்டா பகுதியில் உள்ள பாரவிட அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள ஒரு சாவடியில் வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் (டிஎம்சி) பத்து உறுப்பினர்களும், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த தலா மூன்று பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (சிபிஐ-எம்) லிருந்து தலா இரண்டு பேரும் கொல்லப்பட்டதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.