மின்சாரத் துறையின் உண்மையான அமைச்சராக செந்தில் பாலாஜிதான் இருக்கிறார் என்று ஜெயங்கொண்டத்தில் அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போ பேசிய அன்புமணி கூறியதாவது:
''தமிழ்நாட்டில் இன்று சாதாரண எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் கூட கஞ்சா, ஸ்டாம்ப் உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தக்கூடிய மோசமான சூழலை திமுக அரசு உருவாக்கி விட்டது. அடுத்த தலைமுறை போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட, கேடுகெட்ட திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒடுக்கப்பட்ட பட்டியல் இன மக்களின் வாக்குகள் மட்டும்தான் வேண்டும். ஆனால் இவர்கள் படித்துவிட்டு வேலைக்கு போய் விடக்கூடாது என நினைக்கிறார். கடைசி வரை கூலி தொழிலாளியாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்.
அரியலூர் மாவட்டத்திலிருந்து மட்டும் சுமார் ஒரு லட்சம் இளைஞர்கள், பத்தாயிரம் பெண்கள், திருப்பூர், கோயம்புத்தூர், பெங்களூரு என்று வெவ்வேறு வெளி மாவட்டங்களுக்கும் வெளி ஊர்களுக்கும் சென்று கூலி வேலை பார்த்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால இந்த மாவட்டத்தில் எந்த விதமான தொழில், வேலைவாய்ப்பு வசதியும் இல்லை.
அரியலூர் சோழர்களின் மண்
அரியலூர் மாவட்டம் சோழர்களின் மண். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முப்போகம் விளைந்த மண்ணாக இந்த மண் இருந்தது. அப்படிப்பட்ட இந்த மண்ணை இன்று பாலைவனமாக, குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத மண்ணாக மாற்றி விட்டனர்.
அரியலூர் மாவட்ட மக்களை கையேந்த வைத்து விட்டனர். கடந்த ஆண்டு மட்டும் கொள்ளிடத்தில் 150 டிஎம்சி தண்ணீர் வீணாக சென்று கடலில் கலந்தது. அந்த கொள்ளிடத்தில் இருந்து மூன்று டிஎம்சி தண்ணீர் மட்டும் அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளே கொண்டு வந்து ஏரிகளுக்கு நிரப்பினால் விவசாயிகளும் பயன்பெறுவார்கள். பொது மக்களுக்கும் தேவையான குடிநீர் பிரச்சனையும் சரி செய்யப்படும்.
ஆனால் திமுக இதையெல்லாம் செய்யவில்லை. ஏனென்றால் அரியலூர் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய மக்கள் வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே திமுக பார்க்கிறது.
அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் பல ஏரிகள் இன்று தூர்வாரப்படாமல் உரிய பராமரிப்பு இல்லாமல், விவசாயிகளுக்கு பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. இந்த பிரச்சனை எல்லாம் என்னவென்று கூட முதலமைச்சருக்குத் தெரியாது.
எதற்கும் பயனில்லாத அமைச்சர்
இந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர் சிவசங்கர் எதற்கும் பயனில்லாதவர். 'மாப்பிள்ளை இவர்தான் ஆனால் சட்டை என்னுடையது' என்ற காமெடி போல எஸ்.எஸ்.சிவசங்கர் பெயரளவுக்குத்தான் மின்சார துறை அமைச்சர். ஆனால் உண்மையான அமைச்சராக செந்தில் பாலாஜிதான் செயல்படுகிறார். கையெழுத்து போட மட்டும்தான் எஸ்.எஸ். சிவசங்கர் இருக்கிறார்.
ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக வேட்பாளர் வைத்தியலிங்கம் வெற்றி பெற்றால், இந்த மாவட்ட மக்களுக்கு தேவையான கல்வி வேலை வாய்ப்பு உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பார். அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பாமக வேட்பாளர் வைத்தியலிங்கம் பாடுபடுவார்.
எவ்வளவு கொள்ளை?
தேர்தல் வந்துவிட்டது பணம் மூட்டையை எடுத்துக் கொண்டு வருவார்கள் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள். 6 கோடியே 75 லட்சம் வாக்காளர்களுக்கு, ஒரு வாக்காளருக்கு ஆயிரம் ரூபாய் என்றால் கணக்கு போட்டுப் பாருங்கள், திமுக எவ்வளவு கோடிகளை கொள்ளையடித்து வைத்திருக்கிறார்கள் என்று.
வாக்குக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் சரி இந்த குழந்தைகளை கொலை செய்கிற,விவசாயிகளுக்கு துரோகம் செய்கிற, நெசவாளர்களை மதிக்கத் தெரியாத, இளைஞர்களுக்கு வேலை கொடுப்பாத அரசு ஊழியர்களை ஏமாற்றிய இந்த ஆட்சியை விரட்டி அடியுங்கள்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.
