கேரள சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் இடையே பெயர் குழப்பம் ஏற்பட்டுள்ளது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

Continues below advertisement

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கேரள சட்டமன்ற தேர்தல் வரும் 2026 ஏப்ரல் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. வேட்புமனு மீதான பரிசீலனை இன்று (மார்ச் 24) நடைபெற்றது. தொடர்ந்து வேட்புமனுவை திரும்பப்பெற மார்ச் 26ம் தேதி கடைசி நாளாகும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. கேரள சட்டமன்றம் 140 தொகுதிகளைக் கொண்டதாகும். 

இப்படியான நிலையில் கேரளத்தைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் கேரளாவில் சில தொகுதிகளில் ஒரே பெயரை கொண்ட பலர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாக்குப்பதிவின்போது குழப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலமைச்சர் பினராயி விஜயனும் சிக்கிக் கொண்டிருக்கிறார். 

Continues below advertisement

பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் தொகுதியில் களமிறங்குகிறார். அங்கு விஜயன் ஏ.எம். என்ற சுயேச்சை வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். அதேபோல் ஆலப்புழாவில் அம்பலப்புழா தொகுதி உள்ளது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியைச் சேர்ந்த ஜி. சுதாகரனை எதிர்த்து அதே பெயரைக் கொண்ட வேட்பாளர் போட்டியிட களமிறங்கியுள்ளார். அதேபோல் ஹரிப்பாடு தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா  ரமேஷ் சி என்ற சுயேச்சை வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். 

அதேசமயம் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் பி.வி. அன்வர் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் தொகுதியில் தன் பெயரைக் கொண்ட நான்கு வேட்பாளர்களை எதிர்கொள்ளவுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ.முஹம்மது ரியாஸும் அதே தொகுதியில் முகமது ரியாஸ் டிடி மற்றும் முஹம்மது ரியாஸ் பிசி என்ற வேட்பாளர்களை எதிர்கொள்ளவுள்ளனர். 

எர்ணாகுளத்தின் களமசேரி தொகுதி அமைச்சர் பி.ராஜூவை எதிர்த்து இன்னொரு ராஜூவும், திருவாம்பாடியில் முஸ்லிம் லீக் தலைவருக்கு எதிராக சி.கே. காசிம் என்ற நபர் களம் காண்கிறார். காங்கிரஸ் தலைவர் பிரவீன் குமாரை எதிர்த்து கோழிக்கோட்டின் கொயிலாண்டி தொகுதியில் அதே பெயருடைய நபர் களமிறங்கியுள்ளார். அமைச்சர் தொடங்கி கட்சியின் முன்னணி நிர்வாகி போட்டியிடும் தொகுதி வரை இந்த சிக்கல் எழுந்துள்ளது. 

வேட்புமனு பரிசீலனை மற்றும் வேட்புமனு வாபஸ் வாங்கும் நடைமுறைகள் முடிந்தபிறகே இந்த பிரச்னைக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தேர்தலில் பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.