தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வேட்பு மனு தாக்கலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வித்தியாசமான வருகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Continues below advertisement

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் ஆலந்தூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று முறைப்படி தொடங்கியது. காஞ்சிபுரம் தொகுதிக்கு சார் ஆட்சியரும், உத்திரமேரூர் தொகுதிக்கு மாவட்ட உணவு வழங்கல் அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, இன்று காலை முதலே வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.

இயற்கை வேளாண்மையைப் பறைசாற்றிய வேட்பாளர்

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரம். மாசிலாமணி, இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இவர் ஒரு தீவிர இயற்கை வேளாண் ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்த அவர், மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட முறையில் தனது வருகையைப் பதிவு செய்தார்.

Continues below advertisement

வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில், அவர் தனது தோளில் ஏர் கலப்பையைச் சுமந்து கொண்டு வந்தார். அதோடு மட்டுமல்லாமல், ஒரு கையில் ஆட்டுக்குட்டியையும், மற்றொரு கையில் செழித்து வளர்ந்த நெற்பயிர்களையும் ஏந்தியபடி ஊர்வலமாக வந்தார். மேலும், இயற்கை வேளாண்மைக்குத் தேவையான இடுபொருட்களையும் அவர் உடன் எடுத்து வந்திருந்தார்.

காவலன் கேட் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் நடைப்பயணமாகப் புறப்பட்ட மரம். மாசிலாமணி, ஒரு விவசாயியின் அடையாளத்தோடு தேர்தல் அலுவலகத்திற்குள் நுழைந்தார். அங்கிருந்த பொதுமக்களும், காவல் துறையினரும் இந்த நூதன முறையைக் கண்டு வியப்படைந்தனர். உத்திரமேரூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் தனது வேட்பு மனுவை முறையாகச் சமர்ப்பித்தார்.

மக்களின் கவனம் ஈர்ப்பு

"விவசாயமே நாட்டின் முதுகெலும்பு" என்பதைச் சொல்லால் மட்டும் சொல்லாமல், செயலிலும் காட்டும் விதமாக மரம் மற்றும் ஆடு, மாடு, பயிர்களோடு அவர் வந்தது அப்பகுதியில் பெரும் பேசுபொருளானது. பாரம்பரிய விவசாயக் கருவிகளையும், கால்நடைகளையும் வேட்பு மனு தாக்கலின் போது கொண்டு வந்தது, அந்தத் தொகுதியில் உள்ள விவசாயப் பெருமக்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விவசாயத்தை முதன்மைப்படுத்திய அரசியலை முன்னெடுத்து வரும் சூழலில், அந்தப் பாதையில் பயணிக்கும் மரம். 

மாசிலாமணியின் இந்தச் செயல் கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில், முதல் ஆளாகவும், அதே சமயம் மிக விசித்திரமாகவும் மனுத் தாக்கல் செய்த வேட்பாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிற தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மரம். மாசிலாமணியின் இந்த நூதனப் போராட்டம் போன்ற வேட்பு மனுத் தாக்கல் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.