வரும் சட்டமன்றத் தேர்தலில் மதிமுக நான்கு தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தனிச் சின்னத்தில் போட்டி என அறிவிக்கப்பட்ட சீர்காழி தொகுதியிலும் உதயசூரியனில் மதிமுக போட்டியிடுகிறது.
திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த 28ஆம் தேதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்த வேட்பாளார்கள் பட்டியலில், மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், கடையநல்லூரில் தி.மு.ராஜேந்திரன், மொடக்குறிச்சியில் செந்தில்நாதன், சீர்காழியில் செந்தில் செல்வன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில், சீர்காழி (தனி) தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதிமுக நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்றும், சீர்காழி (தனி) தொகுதியில் செந்தில் செல்வனும் உதயசூரியனில் போட்டியிடுவார் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுக அறிவிப்பை அடுத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.
