மயிலாடுதுறை: மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜமால் முகமது யூனுஸ் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வின் போது, தேர்தல் விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி காவல்துறையினர் தடுத்ததால் ஏற்பட்ட குழப்பமும், நாடாளுமன்ற உறுப்பினர் படிக்கட்டில் அமர்ந்து காத்திருந்த சம்பவமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Continues below advertisement

ஆரவாரத்துடன் வந்த கூட்டணி கட்சிகள்

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனுஸ், இன்று தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வேட்புமனுத் தாக்கல் செய்யும் அறைக்குள் வேட்பாளர் உட்பட ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

காவல்துறையின் கட்டுப்பாடும் நிர்வாகிகளின் சிக்கலும்

வேட்புமனுத் தாக்கலுக்காக மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா, காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனுஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் சென்றனர். அப்போது நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், ஐந்து நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதில் உறுதியாக இருந்தனர். இதன் காரணமாக, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பானுசேகர் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வெளியில் நிறுத்தப்பட்டார்.

Continues below advertisement

நாடாளுமன்ற உறுப்பினரின் விட்டுக்கொடுப்பும் காவல்துறை மறுப்பும்

உள்ளே சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா, கட்சி அமைப்பின் முக்கியத்துவத்தைக் கருதி, மாவட்டத் தலைவர் பானுசேகர் உள்ளே இருப்பது அவசியம் என உணர்ந்தார். உடனடியாக வெளியே வந்த அவர், தனக்கு பதிலாக மாவட்டத் தலைவர் பானுசேகரை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று பானுசேகர் உள்ளே சென்றார்.

இதனைத் தொடர்ந்து, கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிலர் நாடாளுமன்ற உறுப்பினரை (MP) மீண்டும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். "மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினரை உள்ளே அனுமதிக்க வேண்டும்" என்று அவர்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தும், ஐந்து பேர் என்ற எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி காவல்துறையினர் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்ற அலுவலகத்திற்கு வெளியே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

படிக்கட்டில் அமர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்

காவல்துறையினரின் பிடிவாதமான போக்கினாலும், உள்ளே சென்ற கூட்டணி நிர்வாகிகள் யாரும் உடனடியாக வெளியே வராத காரணத்தினாலும் ஒரு இக்கட்டான சூழல் நிலவியது. ஒருவழியாக கூட்டணி கட்சி சேர்ந்த வேறு ஒருவரை வெளியில் அனுப்பி விட்டு அதன் பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த எம்பி அமர இருக்கை இல்லாததால் அவர் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் கோட்டாட்சியர் அலுவலகத்தின் மாடிப்பகுதியில், வேறு வழியின்றி தனியாக படிக்கட்டில் அமர்ந்தார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் அலுவலக படிக்கட்டில் அமர்ந்திருந்த காட்சி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

பின்னர் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அனைத்து சட்டச் சிக்கல்களும் தீர்க்கப்பட்ட பிறகு, கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அதிகாரியிடம் வேட்பாளர் ஜமால் முகமது யூனுஸ் தனது வேட்புமனுவை முறையாகத் தாக்கல் செய்தார்.