மயிலாடுதுறை: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசு மீதும், அதன் கூட்டணி முடிவுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார்.

Continues below advertisement

மாம்பழம் சின்னத்திற்கு வாக்குச் சேகரிப்பு

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமியை ஆதரித்து ஸ்ரீதர் வாண்டையார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மண்ணின் மைந்தரான சித்தமல்லி பழனிச்சாமி அவர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவெற்றி பெறச் செய்ய வேண்டும்" என பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

திமுக மீது ஏமாற்ற குற்றச்சாட்டு

தனது உரையில் திமுகவின் கூட்டணி அணுகுமுறை குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்ட ஸ்ரீதர் வாண்டையார், "மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்குச் சீட்டு தருவதாகக் கூறி திமுக எங்களை ஏமாற்றிவிட்டது. எங்களை நம்பாமல், கண்டவர்களை நம்பி திமுக வீணாகப் போகிறது. வருகிற தேர்தலில் அவர்கள் தோற்பது உறுதி. 250 கோடி ரூபாய் கொடுத்து 10 சீட்டுகளைப் பெற்றவர்களையும், ஓபிஎஸ் மற்றும் பிரேமலதா போன்றவர்களையும் நம்பி திமுக கரையேறப் பார்க்கிறது. ஆனால், உண்மையான செல்வாக்குள்ள எங்களைப் போன்றவர்களைப் புறக்கணித்ததன் விளைவை அவர்கள் சந்திப்பார்கள்" எனத் தெரிவித்தார்.

Continues below advertisement

சமூகக் கூட்டமைப்பும், வெற்றிக் கணிப்பும்

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேசிய அவர், "நானும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் இணைந்து சிதம்பரத்தில் மிகப்பெரிய கூட்டத்தை நடத்தி சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியத்தை வலியுறுத்தினோம். மூவேந்தர் முன்னேற்றக் கழகம் செல்வாக்காக உள்ள மயிலாடுதுறை, காட்டுமன்னார்குடி, ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம் ஆகிய இடங்களில் பாமக போட்டியிடுகிறது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் முக்குலத்தோரும், வன்னியர்களும் இணைந்து வாழ்கிறோம். இந்தச் சமூகக் கூட்டமைப்பு பாமகவின் வெற்றிக்குக் கைகொடுக்கும்" என்றார். மேலும், விருத்தாச்சலத்தில் போட்டியிடும் பிரேமலதாவை அரசியல் ரீதியாக வீழ்த்துவோம் என்றும் அவர் சூளுரைத்தார்.

திமுக வேட்பாளர்களுக்கு மக்கள் எதிர்ப்பு

திமுகவிற்குப் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், "பூம்புகார் திமுக வேட்பாளரான, மாவட்டச் செயலாளர் வாக்குக் கேட்கச் சென்றால் பொதுமக்கள் அவரை விரட்டியடிக்கிறார்கள். ஊருக்குள் வர முடியாத அளவிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது திமுகவின் தோல்வியைக் காட்டுகிறது. மாறாக, அதிமுக கூட்டணிக்கு (தேசிய ஜனநாயகக் கூட்டணி) மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது" என விமர்சித்தார்.

தொகுதிப் பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள்

மயிலாடுதுறை தொகுதியின் நிலவரம் குறித்துப் பேசுகையில், "காங்கிரஸ் கட்சி வெளியூரில் இருந்து வேட்பாளர்களைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. தேர்தல் முடிந்தால் அவர்களை எங்கே போய்த் தேடுவது? ஆனால், நம் வேட்பாளர் மண்ணின் மைந்தர், நமக்காக எப்போதும் இருப்பார். மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது, ஆனால் அதற்குத் தேவையான சாலை வசதிகளை இந்த அரசு செய்து தரவில்லை. தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மயிலாடுதுறை மாவட்டத்தைத் தந்து, ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தைக் கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. அவரது ஆட்சி நீடித்திருந்தால் மயிலாடுதுறையில் நவீன மருத்துவமனை கட்டப்பட்டிருக்கும். முடங்கிக் கிடக்கும் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற வேண்டும் என்றால், மக்கள் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்" என ஸ்ரீதர் வாண்டையார் கேட்டுக்கொண்டார்.

தொண்டர்கள் உற்சாகம்

எங்களைப் புறக்கணித்தவர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் பாமகவின் வெற்றிக்குக் கடுமையாக உழைப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறிய அவர், கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காகத் தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் பாமக மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.