Reasons For BJP Loss: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக மெஜாரிட்டியை இழந்தது ஏன்? எப்படி என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக:


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக, 240 இடங்களில் வென்று மீண்டும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு தேர்தல்களில் ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மையை பெற்ற பாஜக, இந்த தேர்தலில் அந்த வாய்ப்பை இழந்தது. 400 இடங்களை வெல்வோம் என பாஜக சூளுரைத்த யாருமே, குறிப்பாக எதிர்க்கட்சிகள் கூட எதிர்பாராத சரிவை பாஜக சந்தித்துள்ளது. அதற்கான முக்கிய காரணங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


உத்தரபிரதேசத்தில் சறுக்கிய பாஜக


டெல்லியில் அதிகாரத்தை பிடிப்பதற்கான பாதை வடக்கில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோ வழியாக செல்கிறது என்று அடிக்கடி கூறப்படுகிறது. இது இந்திய அரசியலில் முக்கியமான மையப்பகுதியாக கருதப்படுகிறது. 80 மக்களவை தொகுதிகள் அதாவது மொத்த மக்களவை எண்ணிகையில், 15 சதவிகிதத்தை தன்னகத்தே கொண்டு நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக உள்ளது.


2019 தேர்தலில் மாநிலத்தின் 80 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றிய பாஜக,  இந்த முறை வெறும் 33 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. பரப்புரையின் போது மோடி மற்றும் அவரது கட்சி சகாக்கள் பல இடங்களில் வெளிப்படையாகவே இஸ்லாமிய சிறுபான்மையினரை விமர்சித்து பேசியதை காண முடிந்தது. இதன் விளைவாகவே, மாநிலத்தில் உள்ள 3.8 கோடி இஸ்லாமிய வாக்காளர்கள், முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக தீவிரமாக வாக்களித்தனர். அதேநேரம், இஸ்ந்து - முஸ்லீம் மோதலின் ஒரு அடையாளமாக உள்ள பிரமாண்ட ராமர் கோயில் விளம்பரங்களும் பாஜகவிற்கு வாக்காக மாறவில்லை.


தங்கள் கோட்டையாகவும், இந்துத்துவ (இந்து தேசியவாதம்) ஆய்வகமாகவும் இருந்த உத்தரபிரதேசத்தில் இப்படி ஒரு மோசமான தோல்வியை தழுவுவோம் என பாஜக கனவிலும் நினைத்திருக்காது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மோடியின் சொந்த தொகுதி உள்ள உத்தரபிரதேச மாநிலத்திற்கான மோசமான வேட்பாளர் தேர்வும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. உள்ளூர் வேட்பாளர்களை புறக்கணித்தது மற்றும் சில இடங்களில் வெளியாட்களை கொண்டு வந்தது பாஜகவிற்கே எதிராக அமைந்துள்ளது.


கிராமப்புற ஏழைகள் மத்தியில் அதிருப்தி


பயிர்களுக்கு நல்ல விலை, கடன் நிவாரணம், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். எந்தவொரு கட்சிக்கும் விவசாயிகளின் ஆதரவு அவசியம் என்ற சூழலில், அவர்களுடனான உறவு அண்மை காலமாகவே பாஜகவிற்கு மோசமாக உள்ளது. பல மாநிலங்களில் விவசாயிகள் வறுமையில் வாடுகின்றனர். இதற்கான தீர்வு கோரி போராட்டங்கள் வெடித்த பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தான் பாஜக தோல்வி முகம் கண்டுள்ளது.  ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றான வடகிழக்கு பீகாரிலும் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் தலித்துகள் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட இந்துக்கள், பாஜகவின் பெரும்பான்மை அரசாங்கம் அமைந்தால் தங்களுக்கான கல்வி மற்றும் அரசு வேலைக்கான உத்தரவாதமான அணுகலை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிக்குச் வாக்களித்ததாக உள்ளூர் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


வேலைவாய்ப்பின்மை:


வேலைவாய்ப்பின்மை, வருவாய் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் ஆகியவை,  இளைஞர்கள் மத்தியில் ஆளும் கட்சியின் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் 7.4% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை ஏப்ரல் மாதத்தில் 8.1% ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித வளர்ச்சிக்கான நிறுவனம் ஆகியவற்றின் அறிக்கையின்படி, வேலையின்மையில் 83% இளைஞர்கள் உள்ளனர். பாஜகவின் பாரம்பரிய இந்து ஆதரவாளர்களின் ஏற்படாத மனநிறைவுவும் கட்சியின் தோல்விக்கு மற்றொரு காரணியாக இருக்கலாம். அக்கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று சூளுரைத்ததால்,  பல ஆதரவாளர்கள் தாங்கள் வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று வாக்களிக்க முன்வரவில்லை.  


குழப்பத்தில் இருந்து மீண்டு வந்த எதிர்க்கட்சிகள்:


பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கு முன்பு குழப்பத்தில் இருந்ததாகத் தோன்றியது. அதன் தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர் மற்றும் கருத்துகணிப்புகள் பலவும் மோடியை வீழ்த்த முடியாது என்றே கூறின. ஆனால் எதிர்க்கட்சி 230 இடங்களுக்கு மேல் வென்றது, காங்கிரஸ் மட்டும் 2019 இல் 52 இடங்களிலிருந்து 99 இடங்களுக்கு முன்னேறியுள்ளது. நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் விதமாக, ராகுல் காந்தி மேற்கொண்ட நெடுந்தூர நடைபயணமும் மக்களிடையே கவனம் ஈர்த்தது.  காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை உயர்த்திக் காட்டி, மோடி அரசாங்கம் தொழிலதிபர்களுடன் சுமுகமான உறவைக் கொண்டுள்ளது என்றும் தொடர்ந்து குற்றம் சாட்டினர். இது அவர்களுக்கு எதிர்பார்த்த பலனை தந்துள்ளது.


வேட்பாளர்கள் தேர்வு:


வேட்பாளர்கள் தேர்வும் பாஜகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கடும் எதிர்ப்பு இருந்த எம்.பிக்களை மீண்டும் களமிறக்கியதே பாஜகவிற்கே எதிராக அமைந்தது. அதோடு, கட்சியின் வேட்பாளர்களில் நான்கில் ஒரு பங்கு மாற்றுக் கட்சியில் இருந்து அண்மையில் பாஜகவில் இணைந்தவர்களாக இருந்தனர். இது பாஜகவின் அடிமட்ட தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.  இதனால், அவர்களது களப்பணியும் சரிவை சந்தித்தது.


அரசியலமைப்பில் மாற்றமா?


பாஜக மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பிக்களை பெற்றால், அரசியலமைப்பு மாற்றி அமைக்கப்படும் என்ற எதிர்க்கட்சிகளின் பரப்புரையும்  அக்கட்சிக்கு எதிராக அமைந்தது. அதற்கு உதாரணமாக தான் பாஜகவின் எம்.பிக்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. சமாஜ்வாதி கட்சி 33.59 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளன. பாஜக ஆட்சி அமைத்தால் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படக் கூடும் என எதிர்க்கட்சியினரின் பரப்புரையும் அவர்களுக்கு பலன் அளித்துள்ளது.