தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவித்ததில் ஏற்பட்ட குளறுபடி குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “ Voter Turnout’ செயலியில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கெடுக்கப்பட்ட நிலையில் சில குளறுபடிகள் நடைபெற்றது. செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்தார்கள், இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது. 


தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுக்கும் தகவல் வர கால தாமதம் ஆகும். தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து தகவல் வர தாமதம் ஆகும். இதன் காரணமாகவே செயலி மூலமாக ஊடகங்களுக்கு அப்டேட் செய்தோம்.” என தெரிவித்தார். 


மேலும் சில கேள்விகளும், பதில்களும்.. 


மாநில எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே சோதனை: 


மாநில எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே இனி பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். 


விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது..? 


விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து எந்த தகவலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து வரவில்லை. 


பெயர் நீக்கம் குறித்து அக்டோபரிலேயே தகவல்: 


வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து அக்டோபரிலேயே அரசியல் கட்சிகளுக்கு தகவல் தரப்பட்டது. வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக case by case விசாரணை நடத்த வேண்டும். கடந்த 1996ல் தரப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை செல்லுபடியாகும். புதிய அட்டைதான் தேவையென்று இல்லை. வாக்காளர் பட்டியல் தொடர்பாக வாராவாரம் அரசியல் கட்சிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறும். வாக்காளர் பட்டியலை பெயரை சேர்க்க, சரிபார்க்க பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வாக்காளர் நீண்டகாலமாக அவரது முகவரியில் இல்லாவிட்டால் பட்டியலில் பெயர் இல்லாமல் போகலாம். 


என விளக்கம் அளித்தார். 


கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் முதல் கட்டமாக நடைபெற்றது. அதில், தமிழ்நாடு முழுவதும் 69.72 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.


மாவட்டங்கள் வாரியாக பதிவான வாக்கு சதவிகிதம் பின்வருமாறு:



  1. திருவள்ளூர் - 68.59%

  2. வடசென்னை 60.11%

  3. தென்சென்னை - 54.17%

  4. ஸ்ரீபெரும்புதூர் - 60.25%

  5. காஞ்சிபுரம் - 71.68%

  6. அரக்கோணம் - 74.19%

  7. மத்திய சென்னை - 53.96%

  8. வேலூர் - 73.53%

  9. கிருஷ்ணகிரி - 71.50%

  10. தருமபுரி - 81.20%

  11. திருவண்ணாமலை – 74.24%

  12. ஆரணி - 75.76%

  13. விழுப்புரம் - 76.52%

  14. கள்ளக்குறிச்சி - 79.21%

  15. சேலம் - 78.16%

  16. நாமக்கல் - 78.21%

  17. ஈரோடு - 70.59%

  18. திருப்பூர் - 70.62%

  19. நீலகிரி - 70.95%

  20. கோவை - 64.89%

  21. பொள்ளாச்சி - 70.41%

  22. திண்டுக்கல் – 71.14%

  23. கரூர் - 78.70%

  24. திருச்சி - 67.51%

  25. பெரம்பலூர் - 77.43%

  26. கடலூர் - 72.57%

  27. சிதம்பரம் – 76.37%

  28. மயிலாடுதுறை - 70.09%

  29. நாகை - 71.94%

  30. தஞ்சை - 68.27%

  31. சிவகங்கை - 64.26%

  32. மதுரை - 62.04%

  33. தேனி - 69.84%

  34. விருதுநகர் - 70.22%

  35. ராமநாதபுரம் - 68.19%

  36. தூத்துக்குடி – 66.88%

  37. தென்காசி - 67.65%

  38. நெல்லை - 64.10%

  39. கன்னியாகுமரி - 65.44%