தமிழகத்தில் நாளை நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு சாவடி மையங்களுக்கு கொண்டும் செல்லும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதற்காக தேனி மாவட்டத்தில் 11 இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் நகராட்சிக்கு பெரியகுளம் வி.எம். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு தேனி மேரி மாதா சி.எம்.ஐ. பப்ளிக் பள்ளியிலும், போடி நகராட்சிக்கு போடி ஸ்பைஸ்வேலி ஆசிரியர் கல்வியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், சின்னமனூர் நகராட்சிக்கு சின்னமனூர் காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கம்பம் நகராட்சிக்கு நகராட்சி அலுவலகத்திலும், கூடலூர் நகராட்சிக்கு கீழக்கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ளது.
ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், போ.மீனாட்சிபுரம், பூதிப்புரம், மேலச்சொக்கநாதபுரம், பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி ஆகிய பேரூராட்சிகளுக்கு முத்துதேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், அனுமந்தன்பட்டி, ஹைவேவிஸ், காமயகவுண்டன்பட்டி, குச்சனூர், மார்க்கையன்கோட்டை, ஓடைப்பட்டி, க.புதுப்பட்டி, உத்தமபாளையம் ஆகிய பேரூராட்சிகளுக்கு உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியிலும், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் ஆகிய பேரூராட்சிகளுக்கு கோம்பை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளியிலும், தாமரைக்குளம், தென்கரை, வடுகபட்டி, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி ஆகிய பேரூராட்சிகளுக்கு டி.வாடிப்பட்டி தேவாங்கர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு காவலர்கள் பாதுகாப்பு போடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட காவல் துறையினர் செய்து தீவிரமாக செய்து வருகின்றனர். அதுபோல், வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படுவதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. போடி, கோம்பையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே ஆய்வு செய்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்