கரூர் மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு 250 கோடி ரூபாய் வரை செலவு செய்ய திமுக தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.

Continues below advertisement

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்காளர்களை சந்தித்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் நிலையில் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். நேற்றிரவு, கரூர் ஆண்டாங் கோயில் கிழக்கு பகுதியில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளும்போது ஏராளமான பொதுமக்கள் அவரை வரவேற்று ஆலாத்தி எடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து வாக்காளர் மத்தியில் பேசுகையில், தப்பி தவறி மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமாய் போய்விடும். இரவு நேரத்தில் கரூர் வாக்காளர்களுக்கு தங்கத்தை கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டி இருப்பார்கள். நீங்கள் தங்கத்தை உரசி பார்த்து வாங்க வேண்டும் (செம்புக்கு தங்க முலாம் பூசி இருப்பார்கள்). வாக்காளர் ஆகிய நீங்கள் எது வேணாலும் வாங்கிக் கொள்ளவும் ஓட்டை மட்டும் இரட்டை இலைக்கு போட வேண்டும்” என்றார்.

Continues below advertisement

மேலும், அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை சிலவற்றை கூறிய பிறகு, செந்தில் பாலாஜி பற்றி பேசினார். அப்பொழுது அவர், “தற்போது கரூரில் நிக்க வில்லை கோவை சென்றுவிட்டார்.இருந்தபோதும் ஒரு தொகுதிக்கு 250 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வருகிறது. ஆகவே வாக்காளர்கள் உஷாராக இருக்க வேண்டும்” என வாக்காளர் மத்தியில் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.