ஒரு காலத்திலும் நான் எடப்பாடி பழனிசாமியை ஏற்கும் மனநிலையில் இல்லை என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 22 நாட்கள் மட்டுமே உள்ளது. ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பரப்புரையை தொடங்கி விட்டது. இதற்கிடையில் புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. இந்த நிலையில் நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவருமான கருணாஸ் இந்த முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். அவருக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி பற்றி விமர்சனம்

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், “2016ம் ஆண்டு தேர்தலில் நான் இரட்டை இலை சின்னத்தில் நின்றதற்கு காரணம், அது புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட சின்னம் என்பதால் தான். அந்த இரட்டை இலையில் அளிக்கப்பட்ட வாக்கு ஜெயலலிதாவுக்கானது. எடப்பாடி பழனிசாமிக்கு யாரும் வாக்களிக்கவில்லை. அவர் கும்பிட்டு வாங்கிய பதவி தான். ஓட்டுப் போட்டு எல்லாம் இபிஎஸ் ஜெயிக்கவில்லை. ஆரம்ப காலத்தில் இருந்து பெருவாரியான வாக்குகள் கொண்ட என்னுடைய சமூகத்தை எடப்பாடி பழனிசாமி புறம்தள்ளி விட்டார்.

Continues below advertisement

அதே சமூகத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் போன்றோரை அவர் ஓரம் கட்டி அரசியலில் அடையாளம் அற்றவர்களாக மாற்றுவதற்கான முயற்சியை தொடர்ந்து அவர் செய்கிறார். மக்கள் விரோதப் போக்கை கையாளுகிறார் என்பதால் தான் அவரை விட்டு அப்போதே நான் வந்து விட்டேன். ஒரு காலத்திலும் நான் எடப்பாடி பழனிசாமியை ஏற்கும் மனநிலையில் இல்லை. அப்போது அது இரட்டை இலை. இப்போது இது ஒத்த இலை. அதுவும் செத்த இலை. அதை யாரும் மதிக்கமாட்டார்கள்” என கூறினார். 

ரவுடி வேட்பாளர்களை இறக்கியிருப்பதாக அதிமுக வேட்பாளர் வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கருணாஸ், “அரசியல் சூழ்ச்சி காரணமாக எடப்பாடி பழனிசாமி என்மீது பொய் வழக்குகளைப் போட்டு ரவுடியாக சித்தரித்து விட்டார். ஆனால் ஒரிஜினல் ரவுடி இபிஎஸ் தான்”  என தெரிவித்தார். 

கென் பிரசாரம் செய்கிறாரா?

தொடர்ந்து மகன் கென் உங்களுக்காக பிரச்சாரம் செய்வாரா என்ற கேள்விக்கு, “அவருக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது. கென் பிரச்சாரம் செய்து நான் ஜெயிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நான் ஏற்றுக்கொண்ட திமுக கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்த கடந்த ஐந்தாண்டுகள் செய்த திட்டங்கள் சொல்லி வாக்கு கேப்பேன். இந்த தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இல்லத்தரசி திட்டம் போதும் நான் சிவகங்கையில் வெற்றி பெற்று விடுவேன்” என கருணாஸ் கூறியுள்ளார்.