ஆதிமுக இன்று அமித்ஷா திமுகவாக மாறிய காலகட்டத்தில் உள்ளது என்றும் மற்றவர்கள் நடுவுல நிறைய பேர் வரலாம்; அதெல்லாம் வீணா போற ஓட்டு என காங்கேயம் சட்டமன்ற தொகுதி பரப்புரையில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு.

Continues below advertisement

 

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், துணைப் பொதுச் செயலாளருமான மு.பெ.சாமிநாதனை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதி, வெள்ளகோவில் - ஈரோடு சாலை சந்திப்பு சாலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். கனிமொழி கருணாநிதி எம்.பிக்கு திமுகவினர்செங்கோல் கொடுத்தனர்.

Continues below advertisement

 

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி.; இந்த உச்சி வெயில் நேரத்திலேயும் உதய சூரியனுக்காக இங்கே குழுமி இருக்கக்கூடிய உங்களை எல்லாம் பார்க்கும் போது, வெற்றி நிச்சயம்; வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

 

இந்த தேர்தல் என்பது, நம்முடைய முதலமைச்சர் சொல்லுவது போல, தமிழ்நாட்டிற்கும் என்.டி.ஏ.வுக்குமான தேர்தல்; தமிழ்நாட்டிற்கும் டெல்லியில் இருக்கக்கூடிய இந்துத்துவவாதிகளுக்குமான தேர்தல்; கீழடியில் விளங்கும் தமிழ் நாகரிகத்திற்கும் நாக்பூரில் இருந்து ஹிந்தி திணிக்க முயலும் அந்த ஆர்.எஸ்.எஸ். அடிப்படைவாதிகளுக்குமான தேர்தல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் சுயமரியாதை, உரிமைகள், நம் வீட்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய தேர்தல் என்ற எண்ணத்தோடு பணியாற்றவும், வாக்களிக்கவும் வேண்டும்.

நாம் மக்களைச் சந்தித்து உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்கும் போது, மக்களுக்கு கொடுத்திருந்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டு தான் சந்திக்கிறோம். அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன் தன்னுடைய தொகுதியில் உள்ள மக்களுக்காக ஒவ்வொரு முறையும் போராடி, வாதாடி பணியாற்றி வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உங்களின் வேட்பாளராக மறுபடியும் அமைச்சர் நிறுத்தி இருக்கிறார்கள்.

 

ஆனால், எதிர்க்கட்சியில் உள்ள வேட்பாளர்களை தேர்தல் முடிந்த பிறகு பார்க்கவே முடியாது. தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யக்கூடிய கூட்டணிதான் அது. எடப்பாடி பழனிசாமியை எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்வார்; தன்னை வளர்த்த கட்சிக்கும் துரோகம் செய்யக்கூடியவர். யாருடைய காலில் விழுந்து பதவி பெற்றாரோ, இன்று அ.தி.மு.க.வில் அந்த அம்மையாருக்கே இடம் இல்லை.

 

முன்னாள் முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ்., தமிழ்நாட்டை காப்பாற்றும் நோக்கில் திமுகவுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தன்னை வளர்த்த கட்சிக்கே துரோகம் செய்தவர்; அதே நேரத்தில் தமிழ்நாட்டுக்கும், நம்முடைய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக பாஜக கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து வாய் திறக்காதவராக இருந்துள்ளார்.

 

சிறுபான்மையின மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை. கிராமப்புறங்களில் உள்ள சாதாரண, சாமானிய மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை உறுதியாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று யாருக்காவது 100 நாள் வேலை கிடைக்கிறதா?

 

நாடாளுமன்றத்தில் பாஜக ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. 100 நாள் வேலை கிடைக்காமல் போகும் வகையில் பல கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டம் அது. டெல்லியில் உட்கார்ந்தபடியே, உங்கள் பகுதியில் உள்ள கிராமங்களில் எத்தனை பேருக்கு வேலை வழங்கலாம், என்ன வேலை வழங்கலாம் என்பதையும் அவர்கள் தீர்மானிக்கிறார்கள். எவ்வளவு வேலை வழங்க வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள்.

 

மேலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்தத் திட்டத்திற்காக ஒன்றிய அரசு வழங்கிய நிதியையே குறைத்துவிட்டார்கள். இதனால், 100 நாள் வேலை வழங்கும் அந்தத் திட்டத்தையே முடக்க முயற்சி செய்கிறார்கள்.

 

100 நாள் வேலை திட்டத்தை ஊத்தி மூடிட்டு, இப்போது ஏன் எங்களிடம் ஓட்டு கேட்கிறீர்கள் என்று தேர்தலுக்காக வரும் பாஜகவினரிடம் கேளுங்கள். அப்படிப்பட்ட ஒரு சட்டத்தை கொண்டு வந்தபோது, வாய் திறக்காமல் அதை ஏற்றுக்கொண்டவர் தான் எடப்பாடி பழனிசாமி.

 

100 நாள் வேலைக்கு எதிரான அந்தச் சட்டத்தின் பெயரையே மாற்றிவிட்டார்கள். மகாத்மா காந்தி பெயரை நீக்கிவிட்டார்கள். அதற்கு ‘விபி ஸ்ரீராம்ஜி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அந்த ‘விபி ஸ்ரீராம்ஜி’ என்ற பெயரைப் பற்றி முழுவதும் கேட்காதீர்கள். எனக்கு ஹிந்தி தெரியாது.

 

தமிழ்நாட்டில் நம்ம பிள்ளைகள் எல்லாம் ஹிந்தி படிக்க வேண்டும் என்று திணித்தார்கள். ஆனால் இன்று, நம்ம பிள்ளைகள் ஹிந்தி படிக்காமலேயே பல நாடுகளுக்கு சென்று வேலை செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட திட்டங்களை கொண்டு வந்தபோது வாய் திறக்காமல் ஏற்றுக்கொண்டவர்கள், இன்று தேர்தல் வந்ததும் ஆட்சிக்கு வந்தால் 150 நாள் வேலை கொடுப்போம் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள்.

 

100 நாள் வேலைக்கே குரல் கொடுத்து காப்பாற்ற முடியாத நீங்கள், 150 நாள் வேலை கொடுக்கப் போகிறீர்களா? அதிமுகவின் தேர்தல் அறிக்கையை யாரும் நம்புவதில்லை. 2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் செல்போன் வழங்குவோம் என்று கூறினார்கள். ஆனால் யாருக்காவது செல்போன் கிடைத்ததா? ஒருவருக்கும் கொடுக்கவில்லை.

 

முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கிய வண்ணத் தொலைக்காட்சி பெட்டி இன்று வரை வேலை செய்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 30 வருஷமா உலகத்திலேயே கெடாமல் செயல்பட்டு வரும் தொலைக்காட்சி பெட்டியை வழங்கியது தலைவர் கலைஞர். இன்றும் பல வீடுகளில் மக்கள் அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

கலைஞர் எப்படி தமிழ்நாட்டின் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்க்கிறோரோ,அதேபோல அவர் வழங்கிய தொலைக்காட்சி பெட்டியும் அந்த வீடுகளில் இன்னும் நிலைத்து நிற்கிறது.

 

முதலமைச்சர் அவர்கள் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்குவோம் என்று கூறி, அதை நிறைவேற்றி காட்டியுள்ளார். அதேபோல், இந்த தேர்தல் முடிந்து மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடனே, அந்தத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

 

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர். அடுத்த முறை நாம் ஆட்சிக்கு வந்தவுடன், எந்தவித கட்டணமும் இல்லாமல் இயங்கக்கூடிய மின் மோட்டர்களை 20 லட்சம் விவசாயிகளுக்கு வழங்குவோம் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

 

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான உதவித்தொகை மாதம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அடுத்த முறை ஆட்சிக்கு வந்த உடனே, 35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும். மேலும், ஆட்சிக்கு வந்தவுடன் காலை உணவு திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தி செயல்படுத்தப்படும்.

 

நம்முடைய முதலமைச்சர் ₹8000 ரூபாய்க்கு கூப்பன் கொடுக்கிறேன். உங்களுக்கு எது தேவையோ அதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று நமக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய அந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். 

 

இந்த பகுதியில் பல சாதனைகளை அமைச்சர் நிறைவேற்றி வழங்கியுள்ளார். வட்டமலை காரையோடை திட்டம் 1970-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களின் முயற்சியால் கொண்டு வரப்பட்டது. இந்த ஐந்து ஆண்டுக் கால ஆட்சியில் மட்டும் மூன்று முறை பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்த்தேக்கத்திலிருந்து அதற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அதற்கான நிரந்தரத் தீர்வை காணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 

காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் 1996-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. மேலும், அமராவதி ஆற்றிலிருந்து 3 எம்.எல்.டி. தண்ணீர் கொண்டு வர 13 கோடி ரூபாய் செலவில் நடைபெறும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன; இது அமைச்சர் உங்களுக்காக பெற்றுத் தந்த முக்கியமான திட்டமாகும்.

 

நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில்தான் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. தற்போது நம்முடைய அண்ணன் தளபதி அவர்கள், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தொழில் தொடங்குவதற்காக மூலதன மானியத்துடன் கடன் உதவி வழங்கி வருகிறார். அதன் மூலம் பலர் பயன்பெற்று வருகின்றனர்.

 

இந்த பகுதியில் உள்ள நெசவாளர்கள், இந்த தேர்தல் அறிக்கையில் கைத்தறி நெசவாளர்களுக்காக நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்த கோரிக்கைகளை முன்வைத்தீர்கள். முதியோருக்கான உதவித்தொகையை ₹1200-இலிருந்து ₹2000 ஆக உயர்த்த வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி வழங்கியுள்ளார்.

 

அது மட்டும் அல்ல, கைத்தறிகளை நவீனமாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாளாக இருந்து வந்தது. அதற்காக 90% மானியத்துடன் ₹10,000 வழங்கி கைத்தறிகளை நவீனமாக்க நம்முடைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்ததாக வரும் திராவிட மாடல் அரசு உங்களுடன் உறுதுணையாக நிற்கும்.

 

அதேபோல், ஜவுளி தொழிலில் கோவை, திருப்பூரில் பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தங்கும் வசதிக்காக தொழிலாளர்கள் தங்கக்கூடிய விடுதிகள் கட்டித் தரப்படும்.

 

 

இவ்வாறு பல திட்டங்களை நிறைவேற்றி, அந்த உரிமையோடு தான் இன்று உங்கள் முன் வந்து, உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

 

மற்றவர்கள் நடுவுல நிறைய பேர் வரலாம்; அதெல்லாம் வீணா போற ஓட்டு. அது உங்களுக்கு தெரியும். உங்கள் வாக்குகளை விரயமாக்காதீர்கள், உங்களுடைய பிள்ளைகளுடைய எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும். 

 

படித்த பட்டதாரிகள் வேலை தேடும் காலத்திலும் மனம் சோர்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற தாயுள்ளத்தோடு 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.

ஆதிமுக என்பது அண்ணா திமுகவும் இல்லை, அது அம்மா திமுகவும் இல்லை. இப்பொழுது அமித்ஷா திமுகவாக மாறி இருக்கக்கூடிய காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. நம்முடைய வெற்றி வேட்பாளர் அமைச்சர் மு.பே. சாமிநாதன் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.