சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட போவதில்லை, திமுகவுக்கு ஆதரவு என கமல்ஹாசன் அறிவித்த நிலையில் கமல் செய்திருப்பது தியாகம்,  எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

தேர்தலில் விலகிய மநீம

தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக விறுவிறுப்பாக ஈடுப்பட்டு வருகிறது.  திமுகவுடன் கூட்டணி அமைத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ராஜ்யசபா சீட் வாங்கி நாடாளுமன்றம் சென்றார். இந்தநிலையில் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப் போவதில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்படையதாக இல்லை. அவர்களது தரப்பில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொள்கிறேன். தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடப் போவதில்லை, திமுக கூட்டணி வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்ற முடிவை திறந்த மனதுடன் எடுத்துள்ளோம். இது தியாகம் அல்ல கடமை என கூறியிருந்தார்.

முதல்வர் பதிவு:

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு பதில் கொடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். அதில் அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார். இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம்.

கமல் செய்தது தியாகம் தான்:

"இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்! பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்” என தெரிவித்துள்ளார்.