தமிழ்நாட்டின் பெருமையாகவும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமானவர் அப்துல்கலாம். அப்துல்கலாமின் ஆலோசகராக பணியாற்றிவர் பொன்ராஜ்.
இழிவான பேச்சு:
தற்போது திமுக ஆதரவு நிலைப்பாட்டுடன் உள்ள பொன்ராஜ், தனியார் யூ டியூப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தவெக பெண் தொண்டர்களை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
"ஒரு அறிவார்ந்த தமிழ்நாடு. கல்வி விகிதத்தில், படிப்பறிவில் சிறந்த தமிழ்நாடு. இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இப்படி ஒரு தற்கூறி கூட்டம் இருக்கிறது என்பதை காட்டிக்கொடுத்ததற்கு விஜய்க்கு நன்றி தெரிவிக்க வேண்டும். வரைமுறை இல்லாத தற்குறி கூட்டம்.
விபச்சாரிகள்:
புருஷன் எனக்குத் தேவையில்லை. எனக்கு விஜய்தான் வேண்டும் என்று சொல்லும் விபச்சார கூட்டம். அண்ணாவாக இருந்தாலும், தங்கையாகவும் இருப்போம், அக்காவாகவும் இருப்போம், பொண்டாட்டியாகவும் இருப்போம் என்று விபச்சாரிகள் நிறைந்த ரசிகைகள் நிறைந்த தற்குறி கூட்டம் இருக்கிறது என்பதை உலகத்திற்கு வெளிக்காட்டியதற்கு விஜய்யை பாராட்ட வேண்டும்" என்று பேசியுள்ளார்.
3ம் தர பேச்சு:
இவரது பேச்சு தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் இல்லாத காலத்தில் இதுபோன்ற தரக்குறைவான, இழிவான கருத்து தாக்குதல் அரசியல் களத்தில் இருந்து வந்தது. சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பிறகு கடும் விமர்சனங்கள் காரணமாக பலரும் இதுபோன்று பேசுவதை தவிர்த்து வருகின்றனர்.
ஆனாலும், ஆங்காங்கே ஒவ்வொரு கட்சியிலும் சிலர் இவ்வாறு பேசி வருகின்றனர். ஆனால், நாட்டிற்கே பெருமை தந்த அப்துல்கலாமிடம் உதவியாளராக பணியாற்றிய பொன்ராஜ் இதுபோன்று இழிவாக பேசியது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரிப்பதற்காக பெண்களை விபச்சாரிகள் என்று பேசுவதா? என்று தவெக-வினர் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அவருக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அப்துல்கலாம் உதவியாளரா?
அரசியல் கருத்தை அரசியல் கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்றும், அதுவும் பண்பான கருத்துக்களால் எதிர்கொள்வதே ஆரோக்கியமான அரசியலுக்கும், ஆரோக்கியமான அரசியல் வளர்ச்சிக்கும் உகந்தது. ஆனாலும், ஒவ்வொரு கட்சியிலும் இதுபோன்று இழிவாக பேசுவதற்கு 3ம் தர பேச்சாளர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.
3ம் தர பேச்சாளரைக் காட்டிலும் மிகவும் இழிவாக பேசியுள்ள பொன்ராஜ் எப்படி அப்துல்கலாமிடம் உதவியாளராக பணியாற்றினார்? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த தரக்குறைவான பேச்சிற்கு அவர் பகிரங்கமான மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏன் இப்படி?
வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய கட்சியாக களமிறங்கி தனித்துப் போட்டியிட உள்ள தவெக மிகப்பெரிய வாக்கு வங்கியைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தங்கள் ஆதரவு தெரிவிக்கும் கட்சியின் கவனத்தைப் பெறவும், சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அல்லது வேறு ஏதேனும் சுயலாபத்திற்காக இப்படி பேசுவது சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அவரது மறைவிற்கு பிறகு பொன்ராஜ் 2016ம் ஆண்டு அப்துல்கலாம் லட்சிய இந்திய கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர், அந்த கட்சியை மக்கள் நீதிமய்யத்துடன் இணைத்தார். தற்போது மக்கள்நீதிமய்யம் திமுக கூட்டணியில் உள்ளது.
