தமிழகத்தில் எகிறிய வாக்கு சதவிகிதம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் திருவிழா நேற்று நடைபெற்று முடிவடைந்துள்ளது. அந்த வகையில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்த்தனர். இவர்களில், 2,80,30,658 ஆண் வாக்காளர்களும், 2,93,04,905 பெண் வாக்காளர்களும், 7.728 மூன்றாம் பாலின வாக்காளர்களும் வாக்களிக்க தகுதியானவர்களாக இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 85.10 % வாக்குகள் பதிவாகின.
கடந்த தேர்தலை விட சுமார் 20 லட்சம் பேர் வாக்களித்திருந்தனர். இந்த சூழ்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 40 நாட்கள் தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் மூலம் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
விதிமுறைகளை தளர்த்திய தேர்தல் ஆணையம்
இதில் உரிய ஆதாரம் இல்லாமல் 50ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்பட்ட பணம், நகைகள் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக மருத்துவ செலவு, திருமண செலவுக்காக 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லமுடியாததால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து இன்று முதல் பல்வேறு தளர்வுகளை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. அதன் படி, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அமைக்கப்பட்டு இருந்த பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு திரும்பப் பெறப்பட்டுள்ளது
பறக்கும் படை வாபஸ்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கான நிலையானது உருவாகவில்லை. எந்தவித பெரிய அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. எனவே மறு தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லாத காரணத்தால் பறக்கும் படை சோதனை முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.
