இறுதிக்கட்டத்தில் தேர்தல் பணிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 14,59,093 பேர் முதல் முறை வாக்காளர்கள் ஆகும். இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம். 

Continues below advertisement

தேர்தல் பணியில் 3 லட்சம் பேர்

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் 1,06,408 இவிஎம் இயந்திரங்கள், 75,064 கட்டுப்பாட்டு அமைப்புகள், 75,064 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தபட உள்ளது. 75,064 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 83 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 300 கம்பெணி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை தொடர் சோதனை நடைபெற்றதில் 1,262 கோடி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

 5949 பதற்றமான வாக்குச்சாவடிகள்

சமூக வலைதளங்கள் தொடர்பாக 143 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2,180 யூஆர்எல் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  249 மாதிரி வாக்குச்சாவடி மையங்கள், 325 முழுமையாக பெண்கள் பணியாற்றும் வாக்குச்சாவடி மையங்கள், 71 மாற்றுதிறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடி மையம், 79 இளம் பணியாளர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தமிழகத்தில் 5949 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும், இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement