விஜய் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார். ஆனால் அரசியலில் ஏதேனும் ஒரு தேர்தலில் போட்டியிட்டால் தான் தெரியும் என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமியிடம், “தமிழகத்தின் தேர்தல் சூழ்நிலை இப்போது எப்படி இருக்கிறது?” என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. அதன்பிறகு தான் நிலைமை என்னவென்று தெரியும். எனினும் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அதிமுகவும் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து ஒரு வலுவான கூட்டணி அமைத்துள்ளோம். தேர்தலுக்கு நாங்கள் தயாராகி விட்டோம். ஏற்கனவே  நான் ஒரு 181 தொகுதிகளில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு மக்களை சந்தித்துள்ளேன்” என தெரிவித்தார். 

மேலும் அதிமுகவின் தேர்தல் பயணம் மிகச்சிறப்பாக எழுச்சியாக இருந்தது. மக்களிடத்தில் மிகப்பெரும் வரவேற்பு இருந்தது. வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிப்பெறப் போகிறது என்பதை மக்களின் முகத்தில் பார்க்க முடிகிறது” என இபிஎஸ் தெரிவித்தார். 

Continues below advertisement

தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக இருப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி, “ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மாறுபட்ட தீர்ப்பை தான் வழங்கியிருக்கிறார்கள். 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு அதிகமான இடங்கள் கிடைத்தது. ஆனால் 2021 சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய கூட்டணி 75 இடங்களுக்கு மேல் வென்றது. எனவே நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் வேறு என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். சட்டமன்ற தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், வரக்கூடாது என மக்கள் முடிவு செய்வார்கள்.

2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள். கருத்து கணிப்பு எப்படி இருந்தாலும் மக்கள் கணக்கு திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். அது நிச்சயம் நடக்கும். சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.  ஆட்சியில் பங்கு குறித்து திமுக காங்கிரஸ் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இது அவர்கள் கூட்டணியில் குழப்பமான சூழல் உள்ளதைக் காட்டுகிறது. தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் போட்டியிடுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு, “அந்த கட்சி ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. அப்படி போட்டியிட்டால் மட்டுமே அவர்களுக்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பது தெரிய வரும். மற்ற கட்சிகள் எல்லாம் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் எடுத்தவுடன் முதலமைச்சர் ஆகவில்லை. பல ஆண்டுகளாக கட்சி பணியாற்றி தான் மக்களின் நன்மதிப்பை பெற்றதன் அடிப்படையில் தான் முதலமைச்சராகும் வாய்ப்பை மக்கள் வழங்கினார்கள். 

விஜய் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார். ஆனால் அரசியலில் கிடையாது. அவர் ஒரு தேர்தலை சந்தித்தால் தான் அதைப்பற்றி விளக்கம் சொல்ல முடியும். இளம் தலைமுறையினர் ஒரு ஆட்சியில் என்ன நடந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.