DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
TN Election 2026 DMK: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, வரும் பிப்ரவரி 22ம் தேதி முதல் தொடங்கும் என திமுக அறிவித்துள்ளது.

TN Election 2026 DMK: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்காததால் திமுக கூட்டணியில் குழப்பம் நிலவுவதாக பேசப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொகுதிப் பங்கீடு - திமுக அறிவிப்பு
திமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”கழகத் தலைவரால் விரைவில் அமைக்கப்படவுள்ள திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவானது சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், பிப்ரவரி 22-ம் தேதி முதல் தோழமை கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக இன்னும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்காதது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. கூட்டணியில் சிக்கல் நிலவுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான், வரும் பிப்ரவரி 22ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கவிருப்பதாக திமுக அறிவித்துள்ளது.
திமுக கூட்டணி கட்சிகள்:
திமுகவின் மிகப்பெரிய பலமாக அதன் வலுவான கூட்டணி கட்டமைப்பு கருதப்படுகிறது. அதன்படி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் மற்ற கட்சிகள் அனைத்துமே திமுக உடனான கூட்டணி தொடருமென உறுதி செய்துள்ளன. ஆனால், காங்கிரஸ் மட்டும் இரட்டை நிலைப்பாட்டுடன் இருப்பதாக அந்த கட்சியின் நகர்வுகள் தெரிகின்றன. கடந்த 2 மாதங்களாகவே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்கும் என காத்திருப்பதாகவும், ஆனால் எந்தவித அழைப்பும் இல்லை என்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வெளிப்படையாகவே பேசியுள்ளார். இதுபோக தவெக உடன் மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணி - யாருக்கு எத்தனை தொகுதிகள்?
தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலின்போது திமுக 174 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. இதுபோக 14 தொகுதிகளை பல சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கினாலும், அந்த வேட்பாளர்களை தனது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட செய்தது. தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டன. மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர். இதேபோன்று மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டு, அந்த வேட்பாளர்கள் அனைவருமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்.
அதேநேரம், இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மேலும், அனைத்து இந்தியா ஃபார்வர்ட் ப்ளாக், மக்கள் விடுதலை கட்சி மற்றும் ஆதி தமிழர் பேரவை ஆகிய கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. தேர்தலின் முடிவில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற, திமுக 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த முறை அனைத்து கட்சிகளுமே குறிப்பாக காங்கிரஸ் தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.






















