தேர்தலை வெல்லும் வியூகத்துடன் வெளியானது வேட்பாளர் பட்டியல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் தேர்வு செய்த வேட்பாளர்கள் பட்டியல் பல்வேறு சிறப்பசம்பங்களைக் கொண்டுள்ளது.
புதுமுகங்களுக்கு வாய்ப்பு
2026ம் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது அதிமுக, அமமுக, தேமுதிக மற்றும் பல்வேறு கூட்டணிக் கட்சியினர் தங்களின் வேட்பாளர் பட்டியலை பல்வேறு பாகங்களாக அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மதியம் கூட்டணிக் கட்சிகளுக்காக தொகுதிகளை இறுதி செய்து வெளியிட்டது. உடனடினடியாக திமுக சார்பில் நேரடியாக போட்டியிடும் 164 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த பட்டியலில் மூன்று அமைச்சர்களுக்கும் பல்வேறு சீனியர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு அந்த இடங்களில் 60க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தீவிரமாக பணியாற்றும் கே.என்.நேரு
கடந்த தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க சென்னை மற்றும் சுற்றுப்புறங்களை அடுத்து முக்கிய பங்காற்றியது டெல்டா மாவட்டங்களாகும். 37 தொகுதிகளில் 32 தொகுதிகளை வெற்றிப்பெற வைத்தது, குறிப்பாக திருச்சியிலுள்ள 9 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணியினர் முழுமையாக வெற்றிப்பெற்றனர். எனவே, ஆட்சி அமைத்தவுடன் தனது முதல் சட்டமன்ற உரையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும் போது, வெற்றி என்றால் 100க்கு 100, அதன்பெயர் கே.என்.நேரு என்று அமைச்சர் நேருவை புகழ்ந்தார். இந்த நிலையில், அமமுக அதிமுக-வுடன் இணைந்துள்ள நிலையில், டெல்டாவை மீண்டும் தக்கவைப்பது முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் லால்குடிக்கு சவுந்தரபாண்டியனுக்கு பதிலாக பாரிவள்ளலும், முசிறிக்கு தியாகராஜனுக்கு பதிலாக எஸ்.எஸ்., கருணைராஜாவும், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பழனியாண்டிக்கு பதிலாக துரைராஜ்-ம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், துறையூர் தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சென்றுள்ளதால் அங்கும் புதுமுகவேட்பாளர் போட்டி வாய்ப்புள்ளது. இத்தகைய புதிய முகங்களுக்கு வாய்ப்பளிப்பதால், கட்சியிலும் ஆட்சியிலும் இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படுவதால் புதிய ரத்தம் பாய்ச்சியதுபோல இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், டெல்டா மாவட்டங்களிலும் இத்தகைய பல்வேறு புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நான்கு முனைப்போட்டி, அமமுக- அதிமுக இணைப்பு நடைபெற்றுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் திமுகவின் வெற்றியை தக்கவைக்கவும், திமுக-வின் ஆட்சியை உறுதி செய்யவும், அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தீவிரமாக பணியாற்றி வருவதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
வேட்பாளர் பட்டியலை தேர்வு செய்தது யார்?
வழக்கமாக திமுக வேட்பாளர் பட்டியலில் கட்சியின் மூத்தவர்களுக்கும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டும், மிகவும் குறைந்த அளவே புது முகங்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும், ஆனால் இந்த முறை இந்த வழக்கமான ஆட்டத்தை மாற்றியமைத்து இருக்கிறார்கள் திமுக தலைமை. இதற்கு காரணம், வரும் சட்டமன்ற தேர்தலை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது, குறிப்பாக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் வேட்பாளர் தேர்வில் நீண்டகாலமாகவே ஆலோசித்தும், தேர்வு செய்தும் வந்துள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் எண்ணவோட்டங்களை கண்டறிய தனித்தனியாக களஆய்வுகளும், கட்சியினரின் கருத்துக்கேட்புகளும் நடத்தப்பட்ட நிலையில் இந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
