சட்டமன்ற தேர்தலில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்குவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார், இதன் மூலம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த தொகுதி பங்கீடுக்கான இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Continues below advertisement

தொகுதி பங்கீடு: 

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் முக்கிய நிகழ்வாக, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

எத்தனை தொகுதிகள்?

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், வரவிருக்கும் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்குவது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கோடும், தமிழகத்தின் வளர்ச்சியைத் தொடரச் செய்யும் இலக்கோடும் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இரு தலைவர்களும் கூட்டாகத் தெரிவித்தனர்.

Continues below advertisement

முதல்வருக்காக ஏற்கிறோம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட உள்ள குறிப்பிட்ட ஐந்து தொகுதிகள் எவை என்பது குறித்த விவரங்கள், அடுத்தகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீடுக்கு பிறகு செய்தியாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகம் பேசியதாவது "திமுக கூட்டணியில் அதிகமாககவும், புதிதாகவும் கட்சிகள் சேர்ந்த சூழலில் நாங்கள் கேட்கும் கூடுதல் தொகுதிகளை தரமுடியாத சூழல் உள்ளதாக முதலமைச்சர் கூறினார், 6க்கு பதிலாக 5 தொகுதிகளை ஏற்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு எந்தவகையிலும் பாஜக, அதிமுக கூட்டணிக்கு சாதகமாகிவிடக்கூடாது என்பதற்காக 5 தொகுதிகளை ஏற்கிறோம், மேலும் தொகுதி எண்ணிக்கை குறைவதால் கட்சிகள் அழியும் என்கிற செயல்பாடு என்பது இந்தக் கூட்டணியில் இல்லை என்று சண்முகம் தெரிவித்தார்

ஏற்கனவே இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சிகளுக்கான இடங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி, காங்கிரசுக்கு 28 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.